16
 1 நாட்டின் ஆளுநனுக்குச் 
செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை, 
நீங்கள் சேலா நாட்டிலிருந்து பாலைவனம் வழியாக 
சீயோன் மகளின் மலைக்கு அனுப்புங்கள். 
 2 கூட்டிலிருந்து கலைக்கப்பட்டு, 
செட்டையடிக்கும் பறவைகளைப்போல் 
மோவாபிய பெண்கள், 
அர்னோன் ஆற்றின் துறைகளில் இருக்கிறார்கள். 
 3 “நீங்கள் ஆலோசனைபண்ணி, 
ஒரு தீர்மானம் எடுங்கள். 
நடுப்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்குங்கள். 
தப்பியோடி வருபவருக்கு 
மறைவிடம் கொடுங்கள். 
ஜனங்களைக் காட்டிக் கொடாதிருங்கள். 
 4 மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும். 
அவர்களை அழிப்பவர்களிடமிருந்து தப்பும்படி அவர்களுக்குப் புகலிடமாயிருங்கள்.” 
ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு முடிவுவரும், 
அழிவும் ஓய்ந்துவிடும்; 
துன்புறுத்துபவன் நாட்டிலிருந்து இல்லாமல் போவான். 
 5 அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும். 
தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த 
உண்மையுள்ள ஒருவர் அதில் அமர்ந்திருப்பார். 
அவர் நியாயத்தீர்ப்புச் செய்ய நீதியை நாடுவார்; 
தாமதியாமல் நியாயம் செய்வார். 
 6 மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம். 
அவர்கள் ஆணவம் பெரிதே! 
அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்; 
அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே. 
 7 ஆகவே மோவாபியர் புலம்புகிறார்கள், 
அவர்கள் மோவாபுக்காக ஒன்றுசேர்ந்து புலம்புகிறார்கள். 
கீர்ஹேரேஸேத்தின் திராட்சை அடைகளுக்காகத் 
துக்கத்துடன் அழுது புலம்புகிறார்கள். 
 8 எஸ்போன் வயல்களும் சிப்மாவின் 
திராட்சைக் கொடிகளும் வாடுகின்றன. 
நாடுகளின் ஆளுநர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட 
திராட்சைக் கொடிகளை மிதித்துப் போட்டார்கள். 
இவை ஒருகாலத்தில் யாசேர்வரை நீண்டு 
பாலைவனத்தை நோக்கிப் பரந்திருந்தன. 
அவைகளின் துளிர்கள் வெளியே படர்ந்து 
கடல்வரை சென்றிருந்தன. 
 9 சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல் 
நானும் அழுகிறேன். 
எஸ்போனே, எலெயாலேயே, 
நான் உன்னை என் கண்ணீரால் நனைக்கிறேன்! 
உனது பழங்கள் விளைந்து முதிரும் காலத்திலும், 
உனது அறுவடையின் காலத்திலும் இருக்கும் மகிழ்ச்சியின் சத்தம் அடங்கிற்று. 
 10 பழத்தோட்டங்களிலிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்பட்டு விட்டன; 
திராட்சைத் தோட்டங்களில் ஒருவரும் பாடுவதுமில்லை, சத்தமிடுவதுமில்லை; 
ஆலைகளில் இரசத்துக்காக பழங்களை மிதிப்பவர்களுமில்லை, 
ஏனெனில் நானே பழம் பிழிவோரின் பூரிப்பை ஓயப்பண்ணினேன். 
 11 மோவாபுக்காக என் இருதயமும், 
கிர் ஹெரெஸிற்காக என் உள்ளமும் யாழின் தொனியைப்போல் புலம்புகின்றன. 
 12 மோவாப் தனது மேடையிலுள்ள தெய்வங்களிடம் சென்று 
களைப்புற்றும், 
கோயிலுக்குப்போய் மன்றாடியும் 
அவளுக்கு ஒரு பயனும் இல்லை. 
 13 மோவாபைப் பற்றி யெகோவா முன்பே சொல்லியிருந்த வார்த்தை இதுவே.  14 இப்பொழுதோ யெகோவா சொல்கிறதாவது: “வேலைசெய்ய ஒப்பந்தம் செய்த கூலியாள் தன் நாட்களைக் கணக்கிடுவது போல, மூன்று வருடங்களுக்குள் மோவாபியரின் சிறப்பும், அங்குள்ள பெருந்தொகையான மக்களும் அவமதிக்கப்படுவார்கள். அதில் தப்பியிருப்போர் மிகச் சிலராயும் பெலவீனராயும் இருப்பார்கள்.”