சங்கீதம் 37
தாவீதின் சங்கீதம். 
 1 தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; 
அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 
 2 ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; 
பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள். 
 3 யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; 
நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு. 
 4 யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, 
அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார். 
 5 யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; 
அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார். 
 6 அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், 
உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார். 
 7 யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, 
அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; 
மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் 
அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே. 
 8 கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; 
பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும். 
 9 ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; 
ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் 
நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள். 
 10 இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; 
நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள். 
 11 ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, 
சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள். 
 12 கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, 
அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள். 
 13 ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; 
அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார். 
 14 ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், 
நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் 
கொடியவர்கள் வாளை உருவி 
வில்லை வளைக்கிறார்கள். 
 15 ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; 
அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். 
 16 கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், 
நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது. 
 17 ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; 
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். 
 18 குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; 
அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும். 
 19 அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; 
பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள். 
 20 ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், 
யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், 
அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள். 
 21 கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; 
ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள். 
 22 யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் 
நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; 
அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள். 
 23 ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், 
அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார். 
 24 அவன் இடறினாலும் விழமாட்டான்; 
ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார். 
 25 நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; 
ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, 
அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை. 
 26 நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; 
அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 
 27 தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; 
அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய். 
 28 ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; 
தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். 
அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். 
ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம். 
 29 நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, 
அதில் என்றும் குடியிருப்பார்கள். 
 30 நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 
அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும். 
 31 இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; 
அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை. 
 32 நீதிமான்களைக் கொல்லும்படி, 
கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். 
 33 ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; 
நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை. 
 34 யெகோவாவை எதிர்பார்த்திருந்து, 
அவருடைய வழியைக் கைக்கொள். 
நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; 
கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய். 
 35 கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; 
அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான். 
 36 ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; 
நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை. 
 37 குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; 
சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. 
 38 ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; 
கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். 
 39 நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; 
கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார். 
 40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; 
அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், 
கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.