சங்கீதம் 39
பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம். 
 1 நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, 
என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். 
கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, 
நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” 
 2 நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், 
நலமானதையும் பேசாமல் இருந்தேன். 
ஆனால் என் வேதனை அதிகரித்தது; 
 3 என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; 
நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; 
அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்: 
 4 “யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், 
என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; 
என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும். 
 5 என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; 
எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; 
பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் 
எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே. 
 6 “மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; 
அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், 
அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான். 
 7 “ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? 
என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. 
 8 என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்; 
என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும். 
 9 நான் மவுனமாயிருந்தேன்; 
நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன். 
 10 உமது வாதையை என்னை விட்டகற்றும்; 
உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன். 
 11 பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, 
நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்; 
நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே. 
 12 “யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; 
உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்; 
என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம். 
என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே, 
நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும், 
குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன். 
 13 நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, 
நான் திரும்பவும் மகிழும்படியாய், 
உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”