சங்கீதம் 59
தாவீதின் வீட்டின் அருகே காத்திருந்து அவனை கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது, “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கத் தாவீது பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் சங்கீதம். 
 1 இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; 
எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். 
 2 தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; 
என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 
 3 அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! 
யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க, 
சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள். 
 4 நான் ஒரு தவறும் செய்யவில்லை; 
இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். 
எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்! 
 5 சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, 
இஸ்ரயேலின் இறைவனே, 
இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்; 
கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும். 
 6 மாலையிலே அவர்கள் 
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; 
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். 
 7 அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; 
அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை, 
அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள். 
 8 ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; 
அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர். 
 9 நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; 
இறைவனே, நீரே என் கோட்டை, 
 10 நான் சார்ந்திருக்கும் இறைவன். 
தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார். 
என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார். 
 11 எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; 
அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள். 
உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி, 
அவர்களைத் தாழ்த்திவிடும். 
 12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு, 
அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; 
அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், 
அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக. 
 13 உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; 
அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும். 
அப்பொழுது இறைவன், 
யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று 
பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். 
 14 மாலையிலே அவர்கள் 
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; 
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். 
 15 உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; 
திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள். 
 16 ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; 
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; 
ஏனெனில் நீரே எனது கோட்டையும் 
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர். 
 17 என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; 
இறைவனே, நீரே என் கோட்டையும், 
என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.