சங்கீதம் 101
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; 
உமக்கே நான் துதி பாடுவேன். 
 2 நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; 
நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? 
நான் குற்றமற்ற இருதயத்துடன் 
என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். 
 3 தீங்கான செயல்களை 
நான் என் கண்முன் வைக்கமாட்டேன். 
உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; 
அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. 
 4 வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; 
நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன். 
 5 தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை 
நான் தண்டிப்பேன்; 
கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை 
நான் சகிக்கமாட்டேன். 
 6 நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், 
அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; 
குற்றமற்றவனாய் நடப்பவர்களே 
எனக்கு ஊழியம் செய்வார்கள். 
 7 வஞ்சனை செய்யும் யாரும் 
என் வீட்டில் வாழமாட்டார்கள்; 
பொய்ப் பேசுபவர் யாரும் 
என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள். 
 8 நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் 
காலைதோறும் தண்டிப்பேன்; 
தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் 
யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.