சங்கீத 
புத்தகம்  
 ௧
புத்தகம் 1 (சங்கீதம் 1-41) 
சங்கீதம் 
 ௧ தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும், 
தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். 
 ௨ ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான். 
அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான். 
 ௩ அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான். 
தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான். 
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான். 
அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான். 
 ௪ ஆனால் தீயோர் அப்படியிரார்கள். 
அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள். 
 ௫ ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள். 
அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள். 
 ௬ ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார். 
தீயோரை அவர் அழிக்கிறார்.