அழிவு நாள்
௧கர்த்தருடைய செய்தி எனக்கு வந்தது: ௨“எரேமியா. நீ திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இந்த இடத்தில் உனக்கு மகன்களோ, மகள்களோ இருக்க வேண்டாம்.”
௩கர்த்தர், யூதா நாட்டில் பிறந்த மகன்களையும் மகள்களையும்பற்றி இவ்வாறு சொன்னார். அப்பிள்ளைகளின் தாய்களைப்பற்றியும், தந்தைகளைப்பற்றியும் கர்த்தர் சொன்னது இதுதான்: ௪“அந்த ஜனங்கள் ஒரு பயங்கரமான மரணத்தை அடைவார்கள். அந்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். அவர்களை எவரும் புதைக்கமாட்டார்கள். அவர்களது உடல்கள் தரையில் எருவைப்போன்று கிடக்கும். அந்த ஜனங்கள் பகைவரின் வாளால் மரிப்பார்கள். அவர்கள் பஞ்சத்தால் மரிப்பார்கள். அவர்களது மரித்த உடல்கள், வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும்.”
௫எனவே கர்த்தர், “எரேமியா, மரண உணவு உண்ணும் வீட்டிற்குள் செல்லவேண்டாம். மரித்தவர்களுக்காக அழவும் உனது சோகத்தைக் காட்டவும் நீ போக வேண்டாம். நீ இவற்றை செய்ய வேண்டாம். ஏனென்றால், நான் எனது ஆசீர்வாதத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் யூதாவின் ஜனங்களிடம் இரக்கமாக இருக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௬“யூதா நாட்டிலுள்ள முக்கிய ஜனங்களும் பொது ஜனங்களும் மரிப்பார்கள். அந்த ஜனங்களை எவரும் புதைக்கமாட்டார்கள்: அவர்களுக்காக அழவும்மாட்டார்கள். அந்த ஜனங்களுக்காக வருத்தம் தெரிவிக்கும்படி எவரும் தம்மைத்தாமே வெட்டிக்கொள்ளவோ, தலையை மொட்டையடித்துக்கொள்ளவோமாட்டார்கள். ௭மரித்தவர்களுக்காக அழுகிறவர்களுக்கு எவரும் உணவு கொண்டு வரமாட்டார்கள். தம் தாயையோ தந்தையையோ இழந்தவர்களுக்கு எவரும் ஆறுதல் சொல்லமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகின்றவர்களுக்கு எவரும் குடிக்கவும் கொடுக்கமாட்டார்கள்.
௮“எரேமியா, விருந்து நடக்கும் வீடுகளுக்குள் நீ போகாதே. அந்த வீடுகளுக்குப் போய் உட்கார்ந்து உண்ணவோ குடிக்கவோ செய்யாதே. ௯நமது இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘களியாட்டு மனிதரின் சத்தத்தை விரைவில் நிறுத்துவேன். திருமண விருந்துகளில் எழுப்பப்படும் மகிழ்ச்சி ஒலிகளை விரைவில் நான் நிறுத்துவேன். உமது வாழ்நாளில் இவை நடைபெறும். நான் விரைவில் இவற்றைச் செய்வேன்.’
௧௦“எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் நீ இவற்றைக் கூறு. ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள், ‘கர்த்தர் எங்களுக்கு ஏன் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொன்னார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’ ௧௧நீ அந்த ஜனங்களிடம் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும், ‘உங்கள் முற்பிதாக்களால், பயங்கரமானவை உங்களுக்கு ஏற்படும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னைப் பின் பற்றுவதை விட்டு, அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அந்த அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டனர். உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு விலகினார்கள். எனது சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர். ௧௨ஆனால் நீங்களோ உங்கள் முற்பிதாக்களை விட மோசமான பாவம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள் நீங்கள் விரும்புவதையே செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு கீழ்ப்படிகிறதில்லை. நீங்கள் செய்ய விரும்புவதை மட்டுமே செய்கிறீர்கள். ௧௩எனவே, நான் உங்களை இந்த நாட்டுக்கு வெளியே எறிவேன். உங்களை அயல் நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்துவேன். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், அறிந்திராத நாட்டிற்குப் போவீர்கள். அந்த நாட்டில் நீங்கள் விரும்பும் அந்நிய தெய்வங்களை இரவும் பகலும் சேவிப்பீர்கள். நான் உங்களுக்கு உதவியோ நன்மையோ செய்யமாட்டேன்.”
௧௪“ஜனங்கள் வாக்குறுதிச் செய்கிறார்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு, கர்த்தர் ஒருவரே எகிப்து நாட்டுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார்’ என்பார்கள். ஆனால் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்தச் செய்திகளை ஜனங்கள் சொல்லமாட்டார்கள், ௧௫ஜனங்கள் புதியவற்றைச் சொல்வார்கள். அவர்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு அவர் ஒருவரே வட நாடுகளுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார். அவர்களை அவர் அனுப்பியிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியே அழைத்து வந்தார்’ என்றனர். ஏன் ஜனங்கள் இவற்றைச் சொல்வார்கள்? ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன்.
௧௬“நான் விரைவில் பல மீன் பிடிப்பவர்களை இந்த நாட்டிற்கு வரும்படி அனுப்புவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த மீனவர்கள் யூதாவின் ஜனங்களைப் பிடிப்பார்கள். அது நிகழந்த பிறகு, இந்த நாட்டுக்கு சில வேட்டைக்காரர்களை அனுப்புவேன். அந்த வேட்டைக்காரர்கள் ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை பிளவுகளிலும், யூதா ஜனங்களை வேட்டையாடுவர். ௧௭அவர்கள் செய்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் நான் பார்க்கிறேன். யூதா ஜனங்கள் தாம் செய்கின்றவற்றை என்னிடம் மறைக்க முடியாது. அவர்களது பாவம் என்னிடம் மறைக்கப்படாமல் போகும். ௧௮நான் யூதா ஜனங்களுக்கு அவர்கள் செய்கின்றவற்றுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களது ஒவ்வொரு பாவத்திற்கும் நான் இருமடங்கு தண்டிப்பேன். நான் இதனைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் எனது நாட்டை அருவருப்பான விக்கிரகங்களால் ‘தீட்டு’ ஆக்கிவிட்டனர். நான் அந்த விக்கிரகங்களை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் எனது நாட்டை அந்த விக்கிரகங்களால் நிறைத்துவிட்டனர்.”
௧௯கர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்!
நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம்.
உலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும்.
அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர்.
அவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர்.
ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள்.
௨௦ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா?
இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம்.
ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.
௨௧கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன்.
இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன்.
பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள்.
நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.