ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் உரிய பட்டணங்கள்
லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், இஸ்ரவேலின் பிற கோத்திரங்களின் தலைவர்களையும் கண்டு பேசுவதற்குச் சென்றார்கள். கானான் தேசத்திலுள்ள சீலோ என்னும் நகரில் இது நிகழ்ந்தது. லேவியின் தலைவர்கள் அவர்களை நோக்கி, “கர்த்தர் மோசேக்கு ஓர் கட்டளையிட்டார். நாங்கள் வாழ்வதற்கு நகரங்களையும், எங்கள் மிருகங்கள் மேய்வதற்குத் தேவையான வயல்நிலங்களையும் தருமாறு கட்டளையிட்டார்” என்றார்கள். எனவே இஸ்ரவேலர் கர்த்தருடைய இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். லேவிய ஜனங்களுக்கு இந்த நகரங்களையும், அவர்களின் மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் வழங்கினார்கள்.
கோகாத்தியரின் குடும்பத்தினர் வேவியின் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியனான ஆரோனின் சந்ததியார். யூதா, சிமியோன் மற்றும் பென்யமீன் ஆகியோருக்குரிய பகுதிகளிலிருந்து 13 ஊர்கள் கோகாத் குடும்பத்தின் ஒரு பகுதியினருக்குக் கொடுக்கப்பட்டன.
எப்பிராயீம், தாண், ஆகிய கோத்திரத்தினருக்கும் மனாசே கோத்திரத்தின் பாதி பேர்க்கும் சொந்தமான ஊர்களிலிருந்து பத்து நகரங்கள் கோகாத்தியரின் பிற குடும்பங்களுக்குத் தரப்பட்டன.
கெர்சோனின் குடும்பத்தினருக்கு 13 நகரங்கள் அளிக்கப்பட்டன. இசக்கார், ஆசேர், நப்தலி, மற்றும் பாசானிலிருந்த மனாசேயின் பாதிக்குடும்பத்தினர் ஆகியோருக்குச் சொந்தமான பகுதிகளில் இந்த நகரங்கள் இருந்தன.
மெராரி குடும்பத்தாருக்குப் பன்னிரண்டு ஊர்கள் வழங்கப்பட்டன. ரூபன், காத், செபுலோன் ஆகியோருக்குச் சொந்தமான தேசத்தில் இவை இருந்தன.
இவ்வாறு இஸ்ரவேலர் லேவியருக்கு இந்த நகரங்களையும், அவற்றைச் சுற்றியிருந்த வயல் நிலங்களையும் கொடுத்தனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படும்படியாக அவர்கள் இதைச் செய்தனர்.
யூதாவிற்கும் சிமியோனுக்கும் சொந்தமான பகுதிகளிலிருந்த நகரங்களின் பெயர்கள் இவை: ௧௦லேவியரில் கோகாத் குடும்பத்தாருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் கொடுக்கப்பட்டன. ௧௧கீரியாத்அர்பாவை அவர்களுக்குக் கொடுத்தனர் (இது எபிரோன். அர்பா என்னும் மனிதனின் பெயரால் அழைக்கப்பட்டது. அர்பா ஆனாக்கின் தந்தை.) அவர்களின் மிருகங்களுக்காக நகரங்களின் அருகே சில நிலங்களையும் கொடுத்தார்கள். ௧௨ஆனால் கீரியாத்அர்பா நகரைச் சுற்றிலுமிருந்த நகரங்களும் நிலங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாயிருந்தது. ௧௩எனவே எபிரோன் நகரை ஆரோனின் சந்ததிக்குக் கொடுத்தார்கள். (எபிரோன் பாதுகாப்பான நகரமாயிருந்தது.) லிப்னா, ௧௪யத்தீர், எஸ்தெமொவா, ௧௫ஓலோன், தெபீர், ௧௬ஆயின், யுத்தா, பெத்ஷிமேஸ் ஆகிய நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அளித்தனர். இந்த நகரங்களின் அருகேயிருந்த நிலத்தையும் அவர்களின் கால்நடைகளுக்காக அளித்தனர். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் ஒன்பது நகரங்களைக் கொடுத்தார்கள்.
௧௭பென்யமீன் கோத்திரத்திற்கு சொந்தமான நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அவர்கள் கொடுத்தார்கள். அந்நகரங்கள் கிபியோன், கேபா, ௧௮ஆனாதோத், அல்மோன் ஆகியனவாகும். அவர்களுக்கு இந்த நான்கு நகரங்களையும், மிருகங்களுக்கென அவற்றினருகேயுள்ள நிலங்களையும் கொடுத்தார்கள். ௧௯மொத்தத்தில், ஆசாரியர்களுக்கு 13 ஊர்களைக் கொடுத்தார்கள். (எல்லா ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார்.) ஒவ்வொரு நகருக்கருகேயும் நிலங்களை மிருகங்களுக்காக ஒதுக்கினர்.
௨௦கோகாத்திய குடும்பங்களில் மீதியானவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த பகுதியிலுள்ள நகரங்கள் தரப்பட்டன. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்: ௨௧எப்பிராயீம் மலை நாட்டின் சீகேம் நகரம். (சீகேம் அடைக்கல நகரம்.) கேசேர், ௨௨கிப்சாயீம், பெத்தொரோன் ஆகியவற்றையும் பெற்றார்கள். மொத்தத்தில், எப்பிராயீம் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவ்வூர்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் வழங்கினர்.
௨௩தாண் கோத்திரத்தினர்களுக்கு எல்தெக்கே, கிபெத்தோன், ௨௪ஆயலோன், காத் ரிம்மோன் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம், நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்த நகரங்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.
௨௫மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் தானாகையும், காத் ரிம்மோனையும் கொடுத்தனர். அவர்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களை சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தார்கள்.
௨௬கோகாத்திய குடும்பத்தின் மீதியான ஜனங்கள் பத்து நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பெற்றார்கள்.
௨௭கெர்சோன் குடும்பமும் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தது. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்:
மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் பாசானிலுள்ள கோலானைக் கொடுத்தனர். (கோலான் அடைக்கல நகரம்.) மனாசே ஜனங்கள் பெயேஸ்திராவையும் கொடுத்தார்கள். மொத்தத்தில், மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நிலங்களையும் கொடுத்தனர்.
௨௮இசக்கார் கோத்திரத்தினர் கீசோன், தாபராத், ௨௯யர்மூத், என்கன்னீம் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் இசக்கார் ஜனங்கள் கொடுத்தார்கள்.
௩௦ஆசேர் கோத்திரத்தினர் மிஷயால், அப்தோன், ௩௧எல்காத், ரேகோப் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். ஆசேர் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நகரங்களையும் கொடுத்தனர்.
௩௨நப்தலி கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேசைக் கொடுத்தார்கள். (கேதேஸ் அடைக்கல நகரம்.) நப்தலி ஜனங்கள் அம்மோத்தோரையும் கர்தானையும் கொடுத்தனர். நப்தலி ஜனங்கள் மூன்று நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.
௩௩மொத்தத்தில், கெர்சோன் குடும்பத்தார் 13 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் பெற்றனர்.
௩௪மற்றொரு லேவியர் குழு மெராரி குடும்பம் ஆகும். மெராரி குடும்பம் இந்த நகரங்களைப் பெற்றது: செபுலோன் கோத்திரத்தினர் யோக்னியாம், கர்தா, ௩௫திம்னா, நகலால் ஆகியவற்றைக் கொடுத்தனர். செபுலோன் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். ௩௬ரூபன் கோத்திரத்தினர் அவர்களுக்குப் பேசேர், யாகசா, ௩௭கேதெமோத், மெபகாத் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தத்தில், ரூபன் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். ௩௮காத் கோத்திரத்தினர் அவர்களுக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத்தைக் கொடுத்தனர். (ராமோத் அடைக்கல நகரம்.) மக்னா யீம், எஸ்போன், யாசேர் ஆகியவற்றையும் கொடுத்தனர். ௩௯மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களைச் சார்ந்த நிலங்களையும் காத் ஜனங்கள் கொடுத்தனர்.
௪௦மொத்தத்தில், லேவியரின் கடைசி குடும்பத்தினர் ஆகிய, மெராரி குடும்பத்தினர், பன்னிரண்டு நகரங்களைப் பெற்றனர்.
௪௧எனவே லேவியர்கள் மொத்தம் 48 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றனர். இந்த நகரங்கள் அனைத்தும் பிற கோத்திரத்தினருக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்தன. ௪௨ஒவ்வொரு பகுதியிலும் மிருகங்களுக்கான நிலமும் இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறே இருந்தது.
௪௩அவ்வாறு கர்த்தர் இஸ்ரவேலருக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றினார். அவர் வாக்களித்த எல்லா நிலத்தையும் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஜனங்கள் நிலத்தைப் பெற்று அங்கு வாழ்ந்தனர். ௪௪கர்த்தர் அந்த ஜனங்களின் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே அவர்களின் தேசத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் அமைதி நிலவும்படி செய்தார். அவர்கள் பகைவர்கள் யாரும் அவர்களை வெல்லவில்லை. இஸ்ரவேலர் தமது பகைவர்களை எல்லாம் முறியடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். ௪௫கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த எல்லா அருமையான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் இருக்கவில்லை. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.