God’s Message to Judah and Jerusalem
௧ஆமோத்சின் மகனான ஏசாயா யூதா மற்றும் எருசலேம் பற்றியச் செய்தியைப் பார்த்தான்.
௨கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும்.
இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும்.
அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள்.
௩ஏராளமான ஜனங்கள் அங்கு போவார்கள்.
அவர்கள், “நாம் கர்த்தருடைய மலைக்குப் போவோம் நாம் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம்.
பின் தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்றுத்தருவார்.
நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.
தேவனாகிய கர்த்தருடைய போதனைகளும் செய்தியும் சீயோன் மலையிலுள்ள எருசலேமில் துவங்கி,
உலகம் முழுவதும் பரவும்.
௪பிறகு, தேவனே அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கும் நீதிபதியாவார்.
தேவன் பலரது வாக்குவாதங்களை முடித்துவைப்பார்.
சண்டைக்காகத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஜனங்கள் நிறுத்துவார்கள்.
அவர்கள் தங்கள் வாள்களை கலப்பையின் கொழுவாகச் செய்வார்கள்.
அவர்கள் தங்கள் ஈட்டிகளிலிருந்து செடிகளை வெட்டும் கருவிகளைச் செய்வார்கள்.
ஜனங்கள், மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
ஜனங்கள் மீண்டும் யுத்தத்திற்குரிய பயிற்சி பெறமாட்டார்கள்.
௫யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! ௬நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கிழக்கு நாட்டு ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பெலிஸ்தியர்களைப்போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோத எண்ணங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். ௭பிற நாடுகளிலுள்ள பொன்னாலும் வெள்ளியாலும் உங்கள் தேசம் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. உங்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான இரதங்களும் உள்ளன. ௮உங்கள் தேசம் ஜனங்கள் தொழுதுகொள்ளும் சிலைகளாலும் நிறைந்துள்ளது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். ஜனங்கள் அவற்றைத் தொழுதுகொண்டனர். ௯ஜனங்கள் மேலும் மேலும் மோசமானர்கள். ஜனங்கள் மிகவும் கீழானவர்கள். தேவன், அவர்களை நிச்சயமாக மன்னியாமல் இருப்பார்.
௧௦பாறைகளுக்கு பின்னால் மண்ணில் ஒளித்துக்கொள்ள போ! நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். அவரது மகா வல்லமையிலிருந்து மறைய வேண்டும். ௧௧இறுமாப்புடையவர்கள் இனிமேல் இறுமாப்புடையவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அவமானத்தால் தரையளவு தாழ்த்தப்படுவார்கள். அப்போது, கர்த்தர் ஒருவரே உயர்த்தப்படுவார்.
௧௨கர்த்தர் ஒரு சிறப்பு நாளுக்குத் திட்டமிட்டார். அன்று, கர்த்தர் பெருமிதம் கொண்டவர்களையும் வீண் பெருமை பேசுபவர்களையும் தண்டிப்பார். பிறகு அவர்கள் முக்கியமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். ௧௩அவர்கள் லீபனோனிலுள்ள உலர்ந்த கேதுரு மரங்களைப் போலிருக்கிறார்கள். அவர்கள் பாசானில் உள்ள கர்வாலி மரங்களைப் போன்றவர்கள். ஆனாலும் தேவன் அவர்களைத் தண்டிப்பார். ௧௪அவர்கள் உயர்ந்த மலைகளையும் உயர்ந்த சிகரங்களையும் போன்றவர்கள். ௧௫அவர்கள் உயர்ந்த கோபுரங்களைப் போன்றவர்கள். பலமான சுவர்களைப் போன்றவர்கள். ஆனால் தேவன் அவர்களைத் தண்டிப்பார். ௧௬அவர்கள் தர்ஷீசின்கப்பல்களைப் போன்றவர்கள். (அக்கப்பல்கள் முக்கியமான பொருட்களால் நிறைந்தவை) எனினும் தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
௧௭அப்போது, ஜனங்கள் பெருமை அடைவதை நிறுத்துவார்கள். இப்போது பெருமிதம் கொள்பவர்கள் தரைமட்டும் பணிவார்கள். அப்போது கர்த்தர் மட்டுமே உயரமாக நிற்பார். ௧௮அனைத்து (பொய்த் தெய்வங்கள்) சிலைகளும் அழிந்து போகும். ௧௯ஜனங்கள் பாறைகளுக்குப் பின்னும் நிலப்பிளவுகளிலும் ஒளிந்துகொள்வார்கள். ஜனங்கள் கர்த்தருக்கும் அவரது பெரும் வல்லமைக்கும் பயப்படுவார்கள். பூமி நடுங்கும்படி கர்த்தர் எழுந்து நிற்கும்போது இது நடைபெறும்.
௨௦அப்போது, ஜனங்கள் தமது பொற் சிலைகளையும், வெள்ளிச் சிலைகளையும் தூர எறிவார்கள். (ஜனங்கள் அந்த உருவங்களைச் செய்து தொழுது கொண்டு வந்தனர்.) மூஞ்சூறுகளும் துரிஞ்சில்களும் வாழ்கிற நிலப்பிளவுகளுக்குள் ஜனங்கள் அந்தச் சிலைகளை எறிவார்கள். ௨௧பிறகு ஜனங்கள் பாறைப் பிளவுகளுக்குள் ஒளிந்துகொள்ளுவார்கள். அவர்கள் கர்த்தருக்கும் அவரது பெரும் வல்லமைக்கும் அஞ்சுவதால், அப்படிச் செய்வார்கள். பூமி நடுங்கும்படி கர்த்தர் எழுந்து நிற்கும்போது இது நடக்கும்.
௨௨உங்களைக் காப்பாற்றிக்கொள்ள மற்ற ஜனங்களை நம்புவதை நிறுத்தவேண்டும். அவர்கள் வெறும் ஜனங்களே. ஜனங்கள் மரிப்பார்கள். எனவே, அவர்கள் தேவனைப்போன்று வல்லமையுள்ளவர்கள் என்று எண்ணக்கூடாது.