ஏதோமுக்கு விரோதமான செய்தி
௧கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௨“மனுபுத்திரனே, சேயீர் மலையைப் பார். அதற்கு விரோதமாக எனக்காகப் பேசு. ௩அதனிடம் சொல், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“ ‘சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமானவன்!
நான் உன்னைத் தண்டிப்பேன்.
நான் உன்னை வெறுமையான நிலமாக்குவேன்.
௪நான் உன் நகரங்களை அழிப்பேன்.
நீ வெறுமை ஆவாய்.
பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.
௫“ ‘ஏனென்றால், நீ எப்பொழுதும் எனது ஜனங்களுக்கு விரோதமாக இருந்தாய். நீ உனது வாளை இஸ்ரவேலுக்கு எதிராக அவர்களின் ஆபத்து காலத்தில் அவர்களின் இறுதித் தண்டனை காலத்தில் பயன்படுத்தினாய்!’ ” ௬எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு, உனக்கு மரணம் வரும்படி ஆணையிடுகிறேன். மரணம் உன்னைத் துரத்தும். நீ ஜனங்களைக் கொல்லுவதை வெறுப்பதில்லை. எனவே மரணம் உன்னைத் துரத்தும். ௭நான் சேயீர் மலையைப் பாழான இடமாக்குவேன். அந்த நகரத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். அந்த நகரத்திற்குள் செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். ௮நான் இதன் மலைகளை மரித்த உடல்களால் நிரப்புவேன். உனது குன்றுகள் முழுவதும் மரித்த உடல்களால் நிரம்பும். உனது பள்ளதாக்குகளிலும், உனது ஆற்றுப் படுக்கைகளிலும், உடல்கள் கிடக்கும். ௯நான் உன்னை என்றென்றும் வெறுமையாக்குவேன். உன் நகரங்களில் எவரும் வாழமாட்டார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
௧௦நீ சொன்னாய், “இந்த இரண்டு குலங்களும், நாடுகளும் (இஸ்ரவேலும் யூதாவும்) என்னுடையதாக இருக்கும். நாங்கள் அவர்களைச் சொந்தமாக எடுத்துக்கொள்வோம்.”
ஆனால் கர்த்தர் அங்கே இருக்கிறார்! ௧௧எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீ என் ஜனங்கள் மேல் பொறாமையோடு இருந்தாய். நீ அவர்கள் மீது கோபத்தோடு இருந்தாய். நீ அவர்களை வெறுத்தாய், எனவே எனது உயிரைக் கொண்டு ஆணையிடுகிறேன், நீ அவர்களைப் புண்படுத்திய அதே முறையில் நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைத் தண்டித்து நான் அவர்களோடு இருப்பதை ஜனங்கள் அறியும்படிச் செய்வேன். ௧௨நான் உனது நிந்தைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை நீ பிறகு அறிந்துகொள்வாய்.
“இஸ்ரவேல் மலைக்கு விரோதமாகப் பல தீயவற்றை நீ சொன்னாய். நீ சொன்னாய், ‘இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருக்கிறது! நான் அவர்களை உணவைப்போன்று சுவைப்பேன்!’ ௧௩நீ பெருமை கொண்டு, எனக்கு விரோதமானவற்றைச் சொன்னாய். நீ பல தடவை சொன்னாய், நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டிருக்கிறேன். ஆம், நீ சொன்னதைக் கேட்டேன்.”
௧௪எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் உன்னை அழிக்கும்போது பூமி முழுவதும் மகிழும். ௧௫இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டபோது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். நானும் உன்னை அதைப் போலவே நடத்துவேன். சேயீர் மலையும் ஏதோம் நாடு முழுவதும் அழிக்கப்படும்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”