௧பாருங்கள், நீங்கள் போரை உருவாக்குகிறீர்கள். ஜனங்களிடமிருந்து பொருளைத் திருடிக்கொள்கிறீர்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து எதையும் திருடமாட்டார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புகிறீர்கள். ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். எனவே, நீங்கள் திருடுவதை நிறுத்தும்போது. மற்ற ஜனங்கள் உங்களிடமிருந்து திருடத் தொடங்குவார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புவதை நிறுத்தும்போது, மற்ற ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவார்கள். பிறகு நீங்கள்
௨“கர்த்தாவே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் உமது உதவிக்காகக் காத்திருக்கிறோம்.
கர்த்தாவே ஒவ்வொரு காலையிலும் பெலத்தைக் கொடும்.
நாங்கள் தொல்லைக்குட்படும்போது எங்களைக் காப்பாற்றும்.
௩உமது வல்லமையான குரல் ஜனங்களை அச்சுறுத்தும், அவர்கள் உம்மிடமிருந்து ஓடிப்போவார்கள்.
உமது மகத்துவம் நாடுகளை ஓடிப்போக வைக்கும்” என்பீர்கள்.
௪நீங்கள் போரில் பொருட்களைத் திருடினீர்கள். அப்பொருட்கள் உம்மிடமிருந்து எடுக்கப்படும். ஏராளமான ஜனங்கள் வந்து, உங்கள் செல்வங்களை எடுப்பார்கள். வெட்டுக்கிளிகள் வந்து உங்கள் பயிர்களை உண்ட காலத்தைப்போன்று இது இருக்கும்.
௫கர்த்தர் மிகப் பெரியவர். அவர் மிக உயரமான இடத்தில் வாழ்கிறார். கர்த்தர் சீயோனை நேர்மையாலும் நன்மையாலும் நிரப்புவார்.
௬எருசலேமே நீ செழிப்பாயிருக்கிறாய். நீ ஞானம் மற்றும் அறிவில் செழிப்புடையவள். நீ கர்த்தரை மதிக்கிறாய். அது உன்னைச் செல்வச் செழிப்புள்ளவளாகச் செய்கிறது. எனவே, நீ தொடர்ந்து இருப்பாய் என்பதை நீ அறிந்துகொள்ளலாம்.
௭ஆனால் கவனி! தேவதூதர்கள் வெளியே அழுதுகொண்டிருக்கிறார்கள்.
சமாதானத்தைக் கொண்டுவரும் தூதர்கள் வெளியே மிகக் கடினமாக அழுகிறார்கள். ௮சாலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எவரும் தெருக்களில் நடந்துகொண்டிருக்கவில்லை.
ஜனங்கள் தாங்கள் செய்த உடன்படிக்கையை உடைத்துள்ளனர். சாட்சிகளிலிருந்து நிரூபிக்கப்படுவதை ஜனங்கள் நம்ப மறுக்கின்றனர். எவரும் மற்ற ஜனங்களை மதிக்கிறதில்லை. ௯நிலமானது நோயுற்று செத்துக்கொண்டிருக்கிறது. லீபனோன் வெட்கி வாடுகிறது. சாரோன் பள்ளத்தாக்கு வறண்டு காலியாக உள்ளது. பாசானும் கர்மேலும் ஒரு காலத்தில் அழகான செடிகளை வளர்த்தன. ஆனால் இப்போது அந்தச் செடிகள் வளருவதை நிறுத்தியிருக்கின்றன.
௧௦கர்த்தர் கூறுகிறார், “இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன். ௧௧நீங்கள் பயனற்ற செயல்களைச் செய்திருக்கிறீர்கள். அவை பதரைப் போலவும் வைக்கோலைப் போலவும் இருக்கும். அவை எதற்கும் பயனற்றவை. உங்கள் சுவாசம் நெருப்பைப் போன்றது. அது உங்களை எரிக்கும். ௧௨ஜனங்கள் அவர்களது எலும்புகள் சுண்ணாம்பைப்போன்று ஆகும்வரை எரிக்கப்படுவார்கள். ஜனங்கள் விரைவாக முட்கள் மற்றும் காய்ந்த புதர்களைப்போன்று எரிக்கப்படுவார்கள்.
௧௩“வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப் பற்றி அறிந்துகொள்வீர்கள்.”
௧௪சீயோனில் உள்ள பாவிகள் பயந்துகொண்டிருக்கிறார்கள். தீயச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிற ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்கள், “எங்களில் எவரும் அழிக்கும் இந்த நெருப் பினூடே உயிர் வாழ முடியுமா? என்றென்றும் எரிந்துகொண்டிருக்கிற இந்நெருப்பின் அருகில் எவரால் வாழமுடியும்?”
௧௫நல்லதும் நேர்மையானதுமான ஜனங்கள், பணத்துக்காக மற்றவர்களைத் துன்புறுத்தாதவர்கள் அந்த நெருப்பிலிருந்து தப்பமுடியும். அந்த ஜனங்கள் லஞ்சம் பெற மறுக்கிறார்கள். மற்றவர்களைக் கொலை செய்வதற்குரிய திட்டங்களைக் கவனிக்க மறுக்கிறார்கள். தீயவற்றைச் செய்யத் திட்டம் போடுவதைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். ௧௬உயரமான இடங்களில் அந்த ஜனங்கள் பாதுகாப்பாக வாழுவார்கள். அவர்கள் உயரமான கல்கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் எப்பொழுதும், உணவும் தண்ணீரும் பெற்றிருப்பார்கள்.
௧௭உங்கள் கண்கள் அரசரின் (தேவன்) அழகைப் பார்க்கும். நீங்கள் பெரிய தேசத்தைப் பார்ப்பீர்கள். ௧௮-௧௯கடந்த காலத்தில் நீங்கள் பெற்றிருந்த தொல்லைகளை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். “வேறு நாடுகளிலிருந்து வந்த அந்த ஜனங்கள் எங்கே? நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியுடைய அந்த அதிகாரிகளும் வரி வசூலிப்பவர்களும் எங்கே? நமது பாதுகாப்புக் கோபுரங்களை எண்ணிய ஒற்றர்கள் எங்கே? அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்”.
எருசலேமைத் தேவன் காப்பாற்றுவார்
௨௦நமது மதப்பண்டிகையின் விடுமுறைகளைக் கொண்டாடும் நகரமாகிய. சீயோனைப் பாருங்கள். ஓய்வெடுப்பதற்குரிய அழகான இடமான எருசலேமைப் பாருங்கள். எருசலேம் என்றும் நகர்த்தப்படாத கூடாரம்போல் உள்ளது. இனி அதன் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை. அதன் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதில்லை. ௨௧-௨௩ஏனென்றால் அங்கே வல்லமையுள்ள கர்த்தர் இருக்கிறார். அந்த நாடானது ஓடைகளும் அகன்ற ஆறுகளும் உள்ள இடமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆறுகளில் பகைவர்களின் படகுகளோ அல்லது சக்தி வாய்ந்த கப்பல்களோ இருப்பதில்லை. அந்தப் படகுளில் வேலைசெய்கிற நீங்கள் கயிறுகளோடு வேலையை உதற முடியும். பாய்மரத்தைப் பலமுள்ளதாக்க உங்களால் முடியாது.உங்களால் பாயை விரிக்கவும் முடியாமல் போகும். ஏனென்றால், கர்த்தர் நமது நீதிபதியாக இருக்கிறார். நமது சட்டங்களைக் கர்த்தர் உருவாக்குகிறார். கர்த்தர் நமது அரசர், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே, கர்த்தர் நமக்கு மிகுந்த செல்வத்தைத் தருவார். முடவர்களும்கூட போரில் கொள்ளையிடுவதின் மூலம் பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள். ௨௪அங்கே வாழ்கிற எவரும், “நான் நோயுற்றுள்ளேன்” என்று சொல்லமாட்டார்கள். அங்கே வாழ்கிற ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.