பில்தாத் யோபுவிடம் பேசுகிறான்
அப்போது சூகியனான பில்தாத் பதிலாக,
“எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்?
பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன.
தேவன் நியாயத்தை மாற்றுவாரோ?
சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ?
உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார்.
அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள்.
ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து
சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும்.
நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால்,
அவர் விரைந்து உமக்கு உதவ வருவார்.
உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார்.
தொடக்கம் அற்பமாக இருந்தாலும்
உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.
“வயது முதிர்ந்தோரைக் கேளும்,
அவர்கள் முற்பிதாக்கள் அறிந்துகொண்டதைத் தெரிந்துகொள்ளும்.
ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம்.
ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை.
௧௦முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும்.
அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்” என்று கூறினான்.
௧௧பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ?
தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ?
௧௨இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும்.
அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும்.
௧௩தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள்.
தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும்.
௧௪அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை.
அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது.
௧௫சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும்.
அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது.
௧௬அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான்.
தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.
௧௭பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும்.
பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும்.
௧௮ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும்,
அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள்.
௧௯ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது.
அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.
௨௦தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார்.
அவர் கொடியோருக்கு உதவமாட்டார்.
௨௧தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும்
உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார்.
௨௨ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள்.
தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்” என்றான்.