ஒருவனுக்கு கடன் வாங்கிக்கொடுக்க உதவுவதால் வரும் ஆபத்து
௧என் மகனே! அடுத்தவனது கடனுக்கு நீ பொறுப்பாளி ஆகாதே. அடுத்தவன் தன் கடனைச் செலுத்த முடியாதபோது நீ அக்கடனைச் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாயா? அடுத்தவன் வாங்கும் கடனுக்கு உன்னைப் பொறுப்பாளியாக ஆக்கிக் கொண்டாயா? ௨அப்படியானால் நீ அகப்பட்டுக்கொண்டாய். உன் சொந்த வார்த்தைகளாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய். ௩நீ அடுத்தவனது அதிகாரத்தின் கீழ் இருக்கிறாய். எனவே அவனிடம் போய் உன்னை விடுவித்துக்கொள். உன்னை அக்கடனிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள். ௪அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே. ௫வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு.
சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து
௬சோம்பேறியே! நீ எறும்பைப்போல இருக்க வேண்டும். எறும்பு என்ன செய்கிறது என்று பார். அதனிடமிருந்து கற்றுக்கொள். ௭அந்த எறும்புக்கு ஒரு அரசனோ, தலைவனோ, எஜமானோ இல்லை. ௮ஆனால் அது கோடைக் காலத்தில் தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்துக்கொள்ளும். தன் உணவை அது பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு அதனிடத்தில் உணவு உள்ளது.
௯சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? ௧௦அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ௧௧ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக்கொண்டு போனது போல இருக்கும்.
தீய மனிதன்
௧௨ஒன்றுக்கும் உதவாத தீயமனிதன் பொய்யையும் தீயவற்றையும் கூறுகிறான். ௧௩அவன் தன் கண்ணைச் சிமிட்டி, கைகளாலும் கால்களாலும் சைகைக்காட்டி ஜனங்களை ஏமாற்றுகிறான். ௧௪அவன் கெட்டவன். அவன் எப்பொழுதும் தொல்லை செய்யவே திட்டமிடுவான். அவன் எல்லா இடங்களிலும் தொல்லை செய்வான். ௧௫ஆனால் அவன் தண்டிக்கப்படுவான். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவனுக்குத் துன்பம் வரும். அவன் விரைவில் அழிந்துப்போவான். எவராலும் அவனுக்கு உதவிசெய்ய முடியாது.
கர்த்தரால் வெறுக்கப்படும் ஏழு காரியங்கள்
௧௬கர்த்தர் இந்த ஆறு அல்லது ஏழு காரியங்களையும் வெறுக்கிறார்.
௧௭கர்வம் கொண்ட கண்கள், பொய்களைக் கூறும் நாவுகள், அப்பாவி ஜனங்களைக் கொல்லும் கைகள்.
௧௮தீயவற்றைச் செய்யத் திட்டமிடும் மனது, கெட்டவற்றைச் செய்ய ஓடும் கால்கள்,
௧௯வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன்.
Warning Against Adultery
௨௦என் மகனே, உன் தந்தையின் கட்டளைகளை நினைவுபடுத்திக்கொள். உன் தாயின் போதனைக ளையும் மறக்காதே. ௨௧அவர்களது வார்த்தைகளை எப்போதும் நினைவுபடுத்திக்கொள். அவற்றை உன் கழுத்தைச் சுற்றிலும் கட்டிக்கொள். அவைகளை உன் இருதயத்தின்மேல் வைத்துக்கொள். ௨௨நீ எங்கே சென்றாலும் அவர்களின் போதனைகள் உனக்கு வழிகாட்டும். நீ தூங்கும்போதும் அவை உன்னைக் கவனித்துக்கொள்ளும். நீ விழித்து எழுந்ததும் அவை உன்னோடு பேசி உனக்கு வழிகாட்டும்.
௨௩உன் பெற்றோர்களின் கட்டளைகளும் போத னைகளும் உனக்குச் சரியான பாதையைக் காட்டும் விளக்குகளைப் போன்றவை. அவை உன்னைத் திருத்தும்; வாழ்க்கைக்கான பாதையில் நீ செல்ல உனக்குப் பயிற்சி தரும். ௨௪பாவமுள்ள பெண்ணிடம் உன்னைப் போகவிடாமல் தடுக்கும். அவர்களது போதனைகள், தன் கணவனை விட்டு விலகி வந்த பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காப்பாற்றும். ௨௫அப்பெண் அழகுள்ளவளாக இருக்கலாம். ஆனால், அந்த அழகு உன் உள்ளத்தை அழித்து உன்னைத் தூண்டாமல் பார்த்துக்கொள். அவளது கண்கள் உன்னைக் கவர்ந்துக்கொள்ளவிடாதே. ௨௬வேசியானவள் ஒரு ரொட்டித்துண்டுக்குரிய விலையையே பெறுவாள். ஆனால் அடுத்தவன் மனைவியோ உனது வாழ்க்கையையே இழக்கச் செய்வாள். ௨௭ஒருவன் தன் மடியிலே நெருப்பை வைத்திருந்தால் அது அவனது ஆடைகளை எரித்துவிடும். ௨௮ஒருவன் நெருப்புக்குள் இறங்கி நடந்தால் அவனது பாதங்கள் எரிந்து கருகும். ௨௯இது போலவே இன்னொருவனது மனைவியோடு படுப்பவன் துன்பப்படுவான்.
௩௦-௩௧பசியின் காரணமாக ஒருவன் உண்பதற்காக உணவைத் திருடலாம். அகப்பட்டுக் கொண்டால், திருடியதைப்போல ஏழு மடங்குக்கு அதிகமாக அபராதம் செலுத்தவேண்டும். அது அவனுடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஈடானதாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் அவனைப் புரிந்துக் கொள்வார்கள். அவனது மரியாதையைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். ௩௨ஆனால் ஒருவன் முட்டாள்தனமாக விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தால், அவன் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவனது அழிவிற்கு அவனே காரணம். ௩௩ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவமானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது. ௩௪அப்பெண்ணின் கணவன் பொறாமை கொள்ளுவான். அவன் கோபமாகவும் இருப்பான். அவன் இவனைத் தண்டிக்க எதையாவது செய்வான். ௩௫அவனது கோபத்தைத் தடுக்க எந்தப் பொருளையும் எவ்வளவு தொகையையும் தர இயலாது.