௧தீயவர்கள் எல்லாவற்றுக்கும் அஞ்சுவார்கள். ஆனால் ஒரு நல்லவன் சிங்கத்தைப் போல் தைரியமானவன் ஆவான்.
௨ஒரு நாடு அடிபணிய மறுத்தால், அது குறுகிய காலமே ஆளும் தீய தலைவர்களைப் பெறும். ஆனால் ஒரு நாட்டிற்கு நல்லவனும் ஞானவானுமாகிய ஒருவன் தலைவனாக இருந்தால், அங்கே நீண்டக் காலம் நிலைத்த ஆட்சி நடைபெறும்.
௩அரசன் ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான்.
௪நீ சட்டத்திற்கு அடிபணிய மறுத்தால் தீயவர்களைச் சார்ந்தவனாவாய். ஆனால் நீ சட்டத்திற்கு அடிபணிந்தால் அவர்களுக்கு எதிரானவனாவாய்.
௫தீயவர்கள் நேர்மையைப்பற்றிப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்கள் அதனை அறிந்துகொள்வார்கள்.
௬ஒருவன் செல்வந்தனாகவும் தீயவனாகவும் இருப்பதைவிட நல்லவனாகவும் ஏழையாகவும் இருப்பது நல்லது.
௭சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.
௮ஏழைகளை ஏமாற்றி அதிக அளவில் வட்டியை வாங்கி நீ செல்வந்தன் ஆனால், அச்செல்வத்தை நீ விரைவில் இழந்துவிடுவாய். இரக்கம் உள்ளவனிடம் அச்செல்வம் போய்ச் சேர்ந்துவிடும்.
௯ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.
௧௦ஒரு தீயவன், ஒரு நல்லவனைப் புண்படுத்தவே பல திட்டங்களைத் தீட்டமுடியும். ஆனால் அத்தீயவன் தனது சொந்த வலையிலேயே விழுவான். நல்லவனுக்கு நன்மையே ஏற்படும்.
௧௧செல்வந்தர்கள் எப்பொழுதும் தம்மைப் பெரிய ஞானிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழையும் பெரிய ஞானியுமானவன், உண்மையைக் கண்டுகொள்கிறான்.
௧௨நல்லவர்கள் தலைவர்களாக வந்தால் எல்லோரும் மகிழ்வார்கள். தீயவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லோரும் போய் ஒளிந்துகொள்வார்கள்.
௧௩ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள்.
௧௪ஒருவன் எப்பொழுதும் கர்த்தருக்கு மரியாதை செய்தால், அவன் ஆசீர்வதிக்கப்படுவான். ஆனால் ஒருவன் பிடிவாதமாக கர்த்தருக்கு மரியாதை தர மறுத்தால், பிறகு அவனுக்குத் துன்பங்களே ஏற்படும்.
௧௫பலவீனமானவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் தீயவன் கோபங்கொண்ட சிங்கத்தைப் போன்றும், சண்டைக்குத் தயாரான கரடியைப் போன்றும் இருப்பான்.
௧௬ஆட்சி செய்பவன் ஞானமுள்ளவனாக இல்லாவிட்டால், தனக்குக் கீழுள்ள ஜனங்களைத் துன்புறுத்துவான். ஆனால் நேர்மையாய் ஆட்சி செய்து, ஜனங்களை ஏமாற்றுவதை வெறுக்கிறவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான்.
௧௭அடுத்தவனைக் கொன்ற குற்றவாளிக்கு எப்பொழுதும் சமாதானம் இருக்காது. அவனுக்கு ஆதரவு தராதே.
௧௮ஒருவன் சரியான வழியில் வாழ்ந்தால் அவன் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் தீயவனாக இருப்பவன் இருந்தால் தன் வல்லமையை இழந்துவிடுவான்.
௧௯கடினமாக உழைப்பவன் உணவை ஏராளமாகப் பெறுவான். ஆனால் எப்போதும் கனவுகள் கண்டு தன் காலத்தை வீணாக்குபவன் ஏழையாகவே இருப்பான்.
௨௦தேவன் தன்னைப் பின்பற்றுபவனை ஆசீர்வதிக்கிறார். ஆனால் செல்வந்தனாக மாறுவதற்கு மட்டும் முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான்.
௨௧ஒரு நீதிபதி நேர்மையானவனாக இருக்க வேண்டும். ஒருவன் இன்னான் என்ற காரணத்திற்காகவே அவனுக்குச் சார்பாகப் பேசக்கூடாது. ஆனால் சில நியாயாதிபதிகள் தனக்குத் தரப்படும் சிறு தொகைகளுக்காகக்கூட தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்கின்றனர்.
௨௨சுயநலக்காரன் செல்வந்தன் ஆவதற்கே முயற்சி செய்கிறான். தன் பேராசை வறுமையின் எல்லைக்கே கொண்டுசெல்லும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான்.
௨௩ஒருவன் செய்கிற தவறைச் சுட்டிக் காட்டி அவனுக்கு உதவிசெய்தால் பிற்காலத்தில் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பான். எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பேசுவதைவிட இது நல்லது.
௨௪சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் “இது தவறில்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன்.
௨௫சுயநலக்காரன் துன்பத்துக்குக் காரணமாக இருப்பான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான்.
௨௬ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.
௨௭ஏழை ஜனங்களுக்கு உதவி செய்பவன், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுவான். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவனுக்கோ அதிகத் தொல்லைகள் வரும்.
௨௮தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.