௧நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று
இருந்தால்
நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும்.
இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள்.
௨நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன்.
நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன்.
கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன்.
அவள் பெண்களிடம் பேசுகிறாள்
௩அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும்.
அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும்.
௪எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள்.
நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம்.
எருசலேம் பெண்கள் பேசுகிறார்கள்
௫இந்த பெண் யார்?
தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள்.
அவள் அவனிடம் பேசுகிறாள்
கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன்.
அங்கே உம்மை உமது தாய் பெற்றாள்.
அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள்.
௬என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும்.
உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும்.
நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது.
நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது.
அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன.
பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.
௭ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது.
ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது.
ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால்
ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா?
அவளது சகோதரர்கள் பேசுகிறார்கள்
௮எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள்
அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை.
ஒருவன் அவளை மணக்க வரும்போது
எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?
௯அவள் ஒரு மதில் சுவராக இருந்தால்
நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம்.
அவள் ஒரு கதவாக இருந்தால்
அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம்.
அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்
௧௦நான் ஒரு சுவர்.
எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள்.
அவர் என்னில் திருப்தி அடைகிறார்.
அவன் பேசுகிறான்
௧௧சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான்.
ஒவ்வொருவரும்
1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.
௧௨சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும்.
ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன்.
அவன் அவளிடம் பேசுகிறான்
௧௩தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே,
உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள்
நானும் அதைக் கேட்கவிடு.
அவள் அவனிடம் பேசுகிறாள்
௧௪என் நேசரே வேகமாக வாரும்.
மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும்,
மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.