௧௭
தாவீதைக் குறித்த அகித்தோப்பேலின் அறிவுரை
௧ அகிதோப்பேல் மேலும் அப்சலோமிடம்,
“நான் இப்போது 12,000 ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். இன்றிரவு தாவீதை நான் துரத்துவேன். ௨ அவன் தளர்ந்து சோர்வுற்றிருக்கும்போது அவனைப் பிடிப்பேன். நான் அவனைக் கலக்கமடையச் செய்வேன். அவனது ஆட்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் தாவீது அரசனை மட்டும் கொல்வேன். ௩ பின்பு ஜனங்களையெல்லாம் உங்களிடம் அழைத்து வருவேன். தாவீது மரித்துவிட்டால், எல்லா ஜனங்களும் சமாதானத்தோடு திரும்புவார்கள்” என்றான்.
௪ இத்திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் நல்லதெனப்பட்டது. ௫ ஆனால் அப்சலோம், “அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிடுங்கள். அவன் கூறுவதைக் கேட்கவேண்டும்” என்றான்.
அகித்தோப்பேலின் அறிவுரையை ஊசாய் பாழாக்குகிறான்
௬ ஊசாய் அப்சலோமிடம் வந்தான். அப்சலோம் ஊசாயிடம், “இதுதான் அகித்தோப்பேல் வகுத்தளித்த திட்டம். நாம் இதைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையெனில் சொல்லும்” என்றான்.
௭ ஊசாய் அப்சலோமிடம், “இம்முறை அகிப்தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை” என்றான். ௮ மேலும் ஊசாய், “உன் தந்தையும் அவரது ஆட்களும் வலியவர்கள் என்பது உனக்குத் தெரியும், தன் குட்டிகளைக் களவு கொடுத்த கரடிகள் போல் அவர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். உன் தந்தை பயிற்சிப் பெற்ற வீரர். அவர் ஜனங்களோடு இரவில் தங்கமாட்டார். ௯ அவர் ஒருவேளை குகையிலோ, வேறெங்கோ ஒளிந்திருக்க வேண்டும். அவர் முதலில் உன் ஆட்களைத் தாக்கினால், ஜனங்கள் அச்செய்தியை அறிவார்கள். அவர்கள், ‘அப்சலோமின் ஆட்கள் தோற்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். ௧௦ பின்பு சிங்கம் போல் தைரியம்கொண்ட ஆட்களும் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை சிறந்த வீரர் என்றும், அவரது ஆட்கள் தைரியமானவர்கள் என்றும் அறிவார்கள்.
௧௧ “இதுவே நான் சொல்ல விரும்புவதாகும்: நீ தாண் முதல் பெயெர்செபா மட்டும் உள்ள இஸ்ரவேலரை ஒன்று திரட்ட வேண்டும். அப்போது கடலின் மணலைப் போல் பலர் இருப்பார்கள். பின்பு நீ போருக்குச் செல்லவேண்டும். ௧௨ நாம் தாவீதை அவர் ஒளிந்திருக்குமிடத்திலிருந்து பிடிக்கலாம். பனித்துளி நிலத்தில் விழுவதுபோல், நாம் தாவீதின் மீது விழுந்து பிடிக்கலாம். தாவீதையும் அவரது ஆட்களையும் கொல்லலாம். யாரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். ௧௩ ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது” என்றான்.
௧௪ அப்சலோமும் இஸ்ரவேலர் எல்லோரும், “அற்கியனாகிய ஊசாயின் அறிவுரை அகித்தோப்பேலுடையதைக் காட்டிலும் சிறந்தது” என்றனர். இது கர்த்தருடைய திட்டமானதால் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அகித்தோப்பேலின் நல்ல அறிவுரை பயனற்றுப்போகும்படி கர்த்தர் திட்டமிட்டார். அப்சலோமைக் கர்த்தர் இவ்வாறு தண்டிப்பார்.
தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்
௧௫ இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய், ௧௬ “விரையுங்கள்! தாவீதுக்குச் செய்தி அனுப்புங்கள். இன்றிரவில் ஜனங்கள் பாலைவனத்திற்குக் கடந்து செல்லுமிடங்களில் தங்கவேண்டாமெனக் கூறுங்கள். ஆனால் உடனே யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடந்துவிட்டால் அரசனும் அவனுடைய ஜனங்களும் பிடிபடமாட்டார்கள்” என்று கூறினான்.
௧௭ ஆசாரியர்களின் மகன்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் அரசன் தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.
௧௮ ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள். ௧௯ அம்மனிதனின் மனைவி ஒரு விரிப்பை எடுத்துக் கிணற்றின் மீது விரித்தாள். பின்பு அவள் அதன் மீது தானியங்களைப் பரப்பினாள். தானியத்தைக் குவித்து வைத்திருந்தாற்போல் அக்கிணறு காணப்பட்டது. யாரும் யோனத்தனும் அகிமாசும் அங்கு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ௨௦ அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், “யோனத்தானும் அகிமாசும் எங்கே?” என்று கேட்டார்கள்.
அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கெனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள்.
அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
௨௧ அப்சலோமின் வேலைக்காரர்கள் போன பிறகு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிற்கு வெளியே வந்தார்கள். அவர்கள் போய் தாவீது அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “விரைந்து நதியைக் கடந்து போய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இந்த காரியங்களைத் திட்டமிட்டுள்ளான்” என்றார்கள்.
௨௨ அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.
அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான்
௨௩ இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.
அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்
௨௪ தாவீது மக்னாயீமை வந்தடைந்தார்.
அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர். ௨௫ அப்சலோம் அமாசாவைப் படைக்குத் தலைவனாக்கினான். அமாசா யோவாபின் பதவியை வகித்தான். அமாசா இஸ்மவேலனாகிய எத்திராவின் மகன். செருயாவின் சகோதரியாகிய நாகாசின் மகளாகிய அபிகாயில் அமாசாவின் தாய். (செருயா யோவாபின் தாய்)
௨௬ கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.
சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர்
௨௭ தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அந்த இடத்தில் சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் இருந்தனர். (அம்மோனியரின் ஊராகிய ரப்பாவைச் சார்ந்தவன் சோபி நாகாசின் மகன் லோதேபாரிலிருந்து அம்மியேலின் மகனாகிய மாகீர் வந்தான். கீலேயாத்திலுள்ள ரோகிலிமிலிருந்து வந்தவன் பர்சிலா) ௨௮-௨௯ அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.