௩௩
மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான்
௧ மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய
மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான். ௨ மோசே சொன்னான்:
 
“சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார்.
கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார்.
அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார்.
கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார்.
தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள்.
௩ ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார்.
அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள்.
அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்!
௪ மோசே சட்டத்தை கொடுத்தான்.
அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது.
௫ அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள்.
கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!
ரூபனுக்கான ஆசீர்வாதம்
௬ “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்!
ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!”
யூதாவுக்கான ஆசீர்வாதம்
௭ மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
 
“கர்த்தாவே, யூதாவிலிருந்து தலைவன் உதவிக்காக அழைக்கும்போது கேளும்.
அவனை அவனது ஜனங்களிடம் கொண்டு வாரும்.
அவனைப் பலப்படுத்தும், அவனது பகைவர்களை தோற்கடிக்கும்படி உதவும்.”
லேவிக்கான ஆசீர்வாதம்
௮ மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
 
“லேவி உமது உண்மையான சீடன்.
அவன் ஊரீம் மற்றும் தும்மீமை வைத்திருக்கிறான்.
நீர் மாசாவிலே லேவியின் ஜனங்களைச் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீரிடத்திலே அவர்கள் உமது ஜனங்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தீர்.
௯ கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை.
அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை.
அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள்.
௧௦ அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமது சட்டத்தை இஸ்ரவேலுக்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமக்கு முன்னால் நறுமண பொருட்களை எரிப்பார்கள்.
அவர்கள் உமது பலிபீடத்தில் தகன பலிகளைச் செலுத்துவார்கள்.
 
௧௧ “கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும்.
அவன் செய்கின்றவற்றை ஏற்றுக்கொள்ளும்.
அவனைத் தாக்குகிறவர்களை அழித்துப்போடும்!
அவனது பகைவர்களைத் தோற்கடியும் அப்போது அவர்கள் மீண்டும் அவனை தாக்கமாட்டார்கள்.”
பென்யமீனுக்கான ஆசீர்வாதம்
௧௨ மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்:
 
“கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார்.
பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான்.
கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்.”
யோசேப்புக்கான ஆசீர்வாதம்
௧௩ மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்:
 
“கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும்.
கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும்.
௧௪ அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
௧௫ குன்றுகளும், பழைமையான மலைகளும்
அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும்.
௧௬ பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும்.
யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான்.
எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும்.
௧௭ யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான்.
அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர்.
அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப்
பூமியின் கடைசிவரை தள்ளுவர்!
ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும்,
எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.”
செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம்
௧௮ மோசே இதனைச் செபுலோனுக்குச் சொன்னான்:
 
“செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு.
இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு.
௧௯ அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள்.
அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள்.
அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும்
கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.”
காத்துக்குரிய ஆசீர்வாதம்
௨௦ மோசே இதனைச் சொன்னார்.
 
“தேவனைப் போற்றுங்கள்.அவர் காத்திற்கு மிகுதியான நாட்டைக் கொடுத்தவர்!
காத் ஒரு சிங்கத்தைப் போன்றவன். அவன்படுத்துக் காத்திருக்கிறான். பிறகு, அவன் தாக்கி மிருகத்தைத் துண்டுகளாகக் கிழிப்பான்.
௨௧ அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான்.
அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான்.
ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள்.
கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான்.
இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.”
தாணுக்குரிய ஆசீர்வாதம்
௨௨ மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்:
 
“தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான்.
அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.”
நப்தலிக்கான ஆசீர்வாதம்
௨௩ மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்:
 
“நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய்.
கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார்.
நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.”
ஆசேருக்கான ஆசீர்வாதம்
௨௪ மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்:
 
“மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான்.
அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும்.
௨௫ உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும்.
உனது வாழ்நாள் முழுவதும் நீ பலத்தோடு இருப்பாய்.”
மோசே தேவனைப் புகழுகிறான்
௨௬ “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!
தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.
௨௭ தேவன் என்றென்றும் வாழ்கிறார்.
அவர் உனது பாதுகாப்பான இடம்.
தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்!
அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்.
உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார்.
அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார்.
௨௮ எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.
யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும்.
அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள்.
அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.
௨௯ இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.
வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை.
கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்!
கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார்.
உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள்.
நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!”