௧௦
௧ “நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்.
எனவே நான் தாராளமாக முறையிடுவேன்.
என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன்.
௨ நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்!
நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன்.
௩ ‘தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா?
நீர் உண்டாக்கினதைக் குறித்து நீர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தீயோர் செய்த திட்டங்களில் நீர் மகிழ்ச்சிக்கொள்கிறீரா?
௪ தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா?
மனிதர் காண்பதுபோல் நீர் காரியங்களைப் பார்க்கிறீரா?
௫ எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா?
மனிதனின் வாழ்க்கையைப் போல் உமது வாழ்க்கையும் குறுகியதா? இல்லை!
எனவே அது எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு அறிவீர்?
௬ எனது தவறுகளைப் பார்க்கிறீர்,
என் பாவங்களைத் தேடுகிறீர்.
௭ நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும்
உமது ஆற்றலிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை!
௮ தேவனே, உமது கைகள் என்னை உண்டாக்கி, என் உடலுக்கு வடிவளித்தன.
இப்போது அவை என்னை மூடிக்கொண்டு அழிக்கின்றன.
௯ தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும்
என்னை மீண்டும் களிமண்ணாக மாற்றுவீரா?
௧௦ என்னைப் பாலைப்போன்று வெளியே ஊற்றினீர்.
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பவனைப் போன்று என்னைக் கடைந்து உருமாற்றினீர்.
௧௧ எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர்.
பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர்.
௧௨ எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர்.
நீர் என்னை பராமரித்தீர், என் ஆவியைப் பாதுகாத்தீர்.
௧௩ ஆனால் நீர் இதை உமது இருதயத்தில் மறைத்த வைத்திருக்கிறீர்.
நீர் இரகசியமாக உமது இருதயத்தில் திட்டமிட்டது இது என்பதை நான் அறிவேன்.
௧௪ நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர்,
எனவே நீர் என் தவறுகளுக்கு என்னைத் தண்டிக்க முடியும்.
௧௫ நான் பாவம் செய்யும்போது குற்றவாளியாகிறேன், அது எனக்குத் தீமையானது.
ஆனால் நான் களங்கமற்றவனாயிருக்கும் போதும், என் தலையை உயர்த்திப்பார்க்க முடியவில்லை!
நான் வெட்கப்பட்டு அவமானமடைந்திருக்கிறேன்.
௧௬ எனக்கு வெற்றி கிடைத்து நான் பெருமைப்பட்டால்,
ஒருவன் சிங்கத்தை வேட்டையாடுவதைப் போல என்னை வேட்டையாடுகிறீர்.
எனக்கெதிராக உமது ஆற்றலை மீண்டும் காட்டுகிறீர்.
௧௭ நான் தவறு செய்தேன் என்று நிறுவ உமக்கு எப்போதும் யாரேனும் கிடைப்பர்.
பல வழிகளில் உமது கோபத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவீர்.
அவை எனக்கெதிராக ஒன்றன்பின் ஒன்றாக படைகளை அனுப்புவது போன்றிருக்கும்.
௧௮ எனவே, தேவனே, ஏன் என்னைப் பிறக்க அனுமதித்தீர்?
யாரேனும் என்னைக் காணும் முன்பே நான் மரித்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
௧௯ நான் ஒருபோதும் வாழ்ந்திருக்க வேண்டாமென விரும்புகிறேன்.
தாயின் கருவிலிருந்து நேரே கல்லறைக்கு என்னைச் சுமந்துப் போயிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
௨௦ என் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது.
எனவே என்னைத் தனித்து விடுங்கள்!
௨௧ யாரும் திரும்பிவராத, இரளும் மரணமுமுள்ள இடத்திற்கு நான் போகும் முன்பு,
மிஞ்சியுள்ள சில காலத்தை நான் சந்தோஷமாய் அனுபவிக்க அனுமதியுங்கள்.
௨௨ யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு,
மிஞ்சியுள்ள சிலகாலத்தை நான் மகிழ்ந்திருக்க அனுமதியுங்கள்.
அங்கு ஒளியும் கூட இருளாகும்’ ” என்றான்.