௧௩
௧ யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன்.
நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன்.
௨ உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன்.
நானும் உங்களைப் போலவே புத்திசாலி.
௩ ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை.
சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன்.
என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன்.
௪ ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள்.
ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள்.
௫ நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.
 
௬ “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள்.
நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள்.
௭ நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா?
நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
௮ எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா?
தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா?
௯ உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா?
நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா?
௧௦ ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால்,
தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
௧௧ தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது.
நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
௧௨ உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை.
உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.
 
௧௩ “அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்!
பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
௧௪ நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி
என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.
௧௫ தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன்.
அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.
௧௬ தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும்.
தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
௧௭ நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள்.
நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.
௧௮ நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன்.
எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன்.
நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.
௧௯ நான் தவறென யாரேனும் நிரூபித்தால்
உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்)
 
௨௦ “தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும்,
அப்போது உம்மிடமிருந்து ஒளிந்திருக்கமாட்டேன்.
௨௧ என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்,
பயங்கரங்களால் என்னை அச்சுறுத்துவதை நிறுத்தும்.
௨௨ பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன்.
அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும்.
௨௩ நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்?
நான் என்ன தவறு செய்தேன்?
என் பாவங்களையும் எனது தவறுகளையும் எனக்குக் காட்டும்.
௨௪ தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்?
ஏன் உமது பகைவனைப்போல் என்னை நடத்துகிறீர்?
௨௫ என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா?
நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமேயாவேன்.
ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர்.
௨௬ தேவனே, எனக்கெதிராகக் கசப்பானவற்றைக் கூறுகிறீர்.
நான் இளமையில் செய்த பாவங்களுக்காக என்னை துன்புறச் செய்கிறீரா?
௨௭ என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர்.
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.
எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர்.
௨௮ அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும்,
அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்” என்றான்.