பரிசுத்தக் கூடாரத்தை அர்ப்பணித்தல்
௧ மோசே பரிசுத்தக் கூடாரத்தை அமைத்து முடித்தான். அந்நாளிலேயே அதனை கர்த்தருக்கு அர்ப்பணித்தான். மோசே கூடாரத்தையும் அதிலுள்ள பொருட்களையும், பலிபீடத்தையும் அதற்குரிய அனைத்து பொருட்களையும் அபிஷேகம் செய்தான். இவையனைத்துப் பொருட்களும் கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இது காட்டியது.
௨ பிறகு இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினார்கள். இவர்கள் அவர்களது குடும்பத்தின் தலைவர்களும் கோத்திரங்களின் தலைவர்களும் ஆவார்கள். இவர்களே இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிடும் பொறுப்புடையவர்கள். ௩ இத்தலைவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் மூடப்பட்ட ஆறு வண்டிகளையும் அதை இழுக்க பன்னிரெண்டு மாடுகளையும் கொண்டு வந்தனர். (ஒவ்வொரு தலைவர்களும் ஆளுக்கொரு மாட்டையும் இரு தலைவர்கள் சேர்ந்து ஒரு வண்டியையும் கொடுத்தனர்.) பரிசுத்தக் கூடாரத்தில் தலைவர்கள் இவற்றைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.
௪ கர்த்தர் மோசேயிடம், ௫ “தலைவர்களிடமிருந்து இந்த அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்திற்கான வேலைகளுக்கு இக்காணிக்கைகள் உதவியாயிருக்கும்படி இவற்றை லேவியர்களிடம் கொடு” என்று கூறினார்.
௬ எனவே, மோசே வண்டிகளையும், அவற்றை இழுத்து வந்த மாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை லேவியர்களிடம் கொடுத்தான். ௭ அவன் அவற்றில் இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு அந்த வண்டிகளும், மாடுகளும் தேவையாய் இருந்தன. ௮ பிறகு நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரி குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு இந்த வண்டிகளும் மாடுகளும் தேவையாய் இருந்தன. ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இவர்களின் வேலைக்கான பொறுப்பினை ஏற்றிருந்தான். ௯ மோசே கோகாத் குழுவினருக்கு எந்த வண்டியையும், மாடுகளையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, பரிசுத்தமான பொருட்களைத் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதாகும்.
௧௦ மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்தான். அதே நாளில், தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை, அந்தப் பலிபீடத்தை அர்பணிப்பதற்காகக் கொண்டு வந்தனர், அவர்கள் தங்கள் காணிக்கைகளைக் கர்த்தருக்காகப் பலிபீடத்தின் மேல் வைத்தனர். ௧௧ கர்த்தர் மோசேயிடம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
௧௨-௮௩ பன்னிரெண்டு தலைவர்களில் ஒவ்வொரு வரும் தங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவை பின்வருமாறு:
ஒவ்வொரு தலைவனும் மூன்றேகால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளித் தட்டுக்களையும், ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளிக் கோப்பைகளையும் கொண்டு வந்தனர். இவ்விரண்டு காணிக்கைகளும் அதிகாரப்பூர்வமான அளவால் நிறுக்கப்பட்டன. வட்டமான கிண்ணங்களும், தட்டுகளும் எண்ணெயில் கலக்கப்பட்ட மெல்லிய மாவால் நிரப்பப்பட்டு இருந்தன. இது தானியக் காணிக்கைக்குப் பயன்படுவதாக இருந்தது. ஒவ்வொரு தலைவனும் பெரிய தங்கக் கரண்டியையும் கொண்டு வந்தனர். அது 4 அவுன்ஸ் எடையுள்ளதாய் இருந்தது. இக்கரண்டி நறுமணப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தலைவனும் ஒரு இளம் காளையைக் கொண்டு வந்தனர். அதோடு ஒரு ஆட்டுக் கடா, ஒரு வயதான ஒரு ஆண் ஆட்டுக்குட்டி ஆகியவற்றையும் கொண்டு வந்தனர். இம்மிருகங்கள் தகன பலிக்கு உரியவை. ஒவ்வொரு தலைவனும் பாவ பரிகார பலிக்குரியதாக ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தனர். அதோடு அவர்கள் 2 பசுக்களையும் 5 ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான 5 வெள்ளாட்டுக் கடாக்களையும், 5 ஆண் ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சமாதான பலிக்காகக் கொல்லப்பட்டன.
முதல் நாளில், யூதா கோத்திரத்தின் தலைவனான அம்மினதாபின் மகனான நகசோன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
இரண்டாம் நாளில், இசக்கார் குழுவின் தலைவனான சூவாரின் மகன் நெதனெயேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் அன்பளிப்புகளைச் கொண்டு வந்தான்.
நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவனான சேதேயூரின் மகனான எலிசூர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலுமியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவனான தேகுவேலின் மகன் எலியாசாப் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவனான பெதாசூரின் மகன் கமாலியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவனான கீதெயோனின் மகன் அபீதான் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவனான அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பதினோறாம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவனான ஓகிரானின் மகன் பாகியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பன்னிரெண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவனான ஏனானின் மகன் அகீரா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
௮௪ இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்களிடமிருந்து இவ்வாறு பல்வேறு அன்பளிப்புகள் வந்து சேர்ந்தன. அவர்கள் இவற்றை மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்து அர்ப்பணித்த நாட்களில் கொண்டு வந்தனர். அவர்கள் 12 வெள்ளிக் தட்டுகளையும், 12 வெள்ளிக் கோப்பைகளையும், 12 தங்கக் கரண்டிகளையும் கொண்டு வந்தனர். ௮௫ ஒவ்வொரு வெள்ளித்தட்டும் முன்றே கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கோப்பையும் ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஆக மொத்தம் தட்டுகளும் கோப்பைகளும் சேர்ந்து 60 பவுண்டு அதிகாரப்பூர்வமான அளவு எடையுள்ள வெள்ளியாய் இருந்தது. ௮௬ நறுமணப் பொருட்கள் நிறைந்த 12 தங்கக் கரண்டிகளும், ஒவ்வொன்றும் 4 அவுன்ஸ் உடையதாக இருந்தது. அந்த 12 தங்கக் கரண்டிகளும் சேர்ந்து 3 பவுண்டு அதிகாரப் பூர்வமான அளவு எடையுள்ளதாக இருந்தன.
௮௭ ஆக மொத்தம் தகனபலிக்கான 12 காளைகளும் 12 ஆட்டுக்கடாக்களும், 12 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. அவற்றோடு தானிய காணிக்கையும் கொடுக்கப்பட்டன. கர்த்தருக்கு பாவப்பரிகாரப் பலியாக 12 ஆண் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன. ௮௮ சமாதானப் பலிக்குப் பயன்படுத்துவதற்காகத் தலைவர்கள் மிருகங்களைக் கொண்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கையானது 24 காளைகள், 60 ஆட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், 60 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகள் என இருந்தன. இவ்வாறு மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்த பிறகு, அவர்கள் அதனை அர்ப்பணம் செய்தனர்.
௮௯ கர்த்தரோடு பேசுவதற்காக மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்றான். அப்போது கர்த்தரின் குரல் அவனோடு பேசுவதைக் கேட்டான். அந்தக் குரலானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரு கேருபீன்களின் நடுவில் இருந்து உண்டாயிற்று. தேவன் மோசேயோடு பேசிய முறை இதுதான்.