௧௧
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 
 ௧ கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன். 
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்? 
நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள். 
 ௨ தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள். 
அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள். 
நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள். 
 ௩ நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்? 
நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்? 
 ௪ கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். 
பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார். 
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார். 
கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும். 
 ௫ கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார். 
கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார். 
 ௬ தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார். 
வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள். 
 ௭ ஆனால் கர்த்தர் நல்லவர். 
நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார். 
நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.