அத்தியாயம்– ௨௩
லேவியர்கள்
௧ தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். ௨ இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான். ௩ அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம். ௪ அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும், ௫ நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, ௬ அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான். ௭ கெர்சோனியர்களில், லாதானும், சிமேயும் இருந்தார்கள். ௮ லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான். ௯ சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள். ௧௦ யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சிமேயின் மகன்களாக இருந்தார்கள். ௧௧ யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
கோகாத்தியர்கள்
௧௨ கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர். ௧௩ அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள். ௧௪ தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள். ௧௫ மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள். ௧௬ கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான். ௧௭ எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள். ௧௮ இத்சாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான். ௧௯ எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம். ௨௦ ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
மெராரியர்கள்
௨௧ மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள். ௨௨ எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள். ௨௩ மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். ௨௪ தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். ௨௫ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும், ௨௬ இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும், ௨௭ தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். ௨௮ அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும், ௨௯ சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும், ௩௦ நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும், ௩௧ எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும், ௩௨ ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.