அத்தியாயம்– ௧௦
இஸ்ரவேலர்களை முன்வைத்து எச்சரிப்புகள்
௧ இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள். ௨ எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். ௩ எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள். ௪ எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. ௫ அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ௬ அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது. ௭ மக்கள் உட்கார்ந்து உண்ணவும், குடிக்கவும், வேசித்தன எண்ணத்தோடு விளையாடவும் எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரக ஆராதனைக்காரர்களானதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். ௮ அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக. ௯ அவர்களில் சிலர் கர்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக. ௧௦ அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள். ௧௧ இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. ௧௨ இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ௧௩ மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.
விக்கிரக விருந்தும், கர்த்தருடைய பந்தியும்
௧௪ ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள். ௧௫ உங்களைப் புத்திமான்களென்று நினைத்துப்பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். ௧௬ நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? ௧௭ அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லோரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாக இருக்கிறோம். ௧௮ மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறார்களல்லவா? ௧௯ இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? ௨௦ பிறமார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு இல்லை, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடு ஐக்கியமாக இருக்க எனக்கு மனதில்லை. ௨௧ நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே. ௨௨ நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா?
விசுவாசியின் சுதந்திரம்
௨௩ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது. ௨௪ ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும். ௨௫ கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிச்சாப்பிடுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. ௨௬ பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. ௨௭ அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். ௨௮ ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. ௨௯ உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன? ௩௦ மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்? ௩௧ ஆகவே, நீங்கள், சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். ௩௨ நான் என் சொந்தப் பிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லோருக்கும் பிரியமாக நடக்கிறதுபோல; ௩௩ நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள்.