அத்தியாயம்– ௧௨
யெரொபெயாமுக்கு எதிராக இஸ்ரவேலர்கள் கலகம் செய்தல்
௧ ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான். ௨ ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான். ௩ அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: ௪ உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்திய கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் இலகுவாக்கும்; அப்பொழுது உமக்கு வேலை செய்வோம் என்றார்கள். ௫ அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள். ௬ அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். ௭ அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த மக்களுக்கு வேலைக்காரனாகி, அவர்களைப் பணிந்து, அவர்களுடைய சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எப்போதும் அவர்கள் உமக்கு வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள். ௮ முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து தனக்கு முன்னால் நிற்கிற வாலிபர்களோடு ஆலோசனைசெய்து, ௯ அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். ௧௦ அப்பொழுது அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடம் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என்னுடைய சுண்டுவிரல் என்னுடைய தகப்பனுடைய இடுப்பைவிட பருமனாக இருக்கும். ௧௧ இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள். ௧௨ மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள். ௧௩ ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களுடைய ஆலோசனையின்படி அவர்களோடு பேசி: ௧௪ என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்திரவு கொடுத்தான். ௧௫ ராஜா, மக்கள் சொன்னதைக் கேட்காமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. ௧௬ ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை; இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். ௧௭ ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கு ரெகொபெயாம் ராஜாவாக இருந்தான். ௧௮ பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் பொறுப்பாளனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் வேகமாக இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். ௧௯ அப்படியே இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் சந்ததிக்கு எதிராக கலகம்செய்து பிரிந்து போயிருக்கிறார்கள். ௨௦ யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை.
௨௧ ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் சந்ததியோடு யுத்தம்செய்யவும், ராஜ்ஜியத்தை சாலொமோனின் மகனாகிய தன்னிடம் திருப்பிக்கொள்ளவும், யூதா வீட்டார்கள் பென்யமீன் கோத்திரத்தார்கள் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர்கள் ஒருலட்சத்து எண்பதாயிரம் பேரைக் கூட்டினான். ௨௨ தேவனுடைய மனிதனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது: ௨௩ நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி: ௨௪ நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களோடு யுத்தம்செய்யாமலும், அவரவர் தங்களுடைய வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.
தான் மற்றும் பெத்தேலில் பொற்கன்றுக்குட்டிகள்
௨௫ யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே குடியிருந்து, அங்கிருந்து போய் பெனூவேலைக் கட்டினான். ௨௬ யெரொபெயாம்: இப்போது அரசாட்சி தாவீது குடும்பத்தாரின் பக்கமாகத் திரும்பும். ௨௭ இந்த மக்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த மக்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்களுடைய எஜமானின் பக்கமாகத் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பக்கமாகப் போய்விடுவார்கள் என்று தன்னுடைய மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ௨௮ ஆகையால் ராஜா யோசனைசெய்து, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, மக்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போவது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலர்களே, இதோ, இவைகளே உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி, ௨௯ ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் வைத்தான். ௩௦ இந்தக் காரியம் பாவமாக மாறினது; மக்கள் இந்த கன்றுக்குட்டிக்காகத் தாண்வரை போவார்கள். ௩௧ அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் மகன்களாக இல்லாத மற்ற தாழ்ந்த மக்களை ஆசாரியர்களாக ஆக்கினான். ௩௨ யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப்போலவே எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டாக்கின மேடைகளில் ஆசாரியர்களைப் பெத்தேலிலே நியமித்து, ௩௩ தன்னுடைய மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் மக்களுக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டினான்.