அத்தியாயம்– ௨௦
பெனாதாத் சமாரியாவைத் தாக்குதல்
௧ சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது. ௨ அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் தூதுவர்களை அனுப்பி: ௩ உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய பெண்களும் உன்னுடைய மகன்களுக்குள் சிறந்தவர்களாக இருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். ௪ இஸ்ரவேலின் ராஜா அதற்கு மறுமொழியாக: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான். ௫ அந்த தூதுவர்கள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய வெள்ளியையும், பொன்னையும், பெண்களையும், மகன்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே. ௬ ஆனாலும் நாளை இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்காரர்களை உன்னிடம் அனுப்புவேன்; அவர்கள் உன்னுடைய வீட்டையும் உன்னுடைய வேலைக்காரர்களின் வீடுகளையும் சோதித்து, உன்னுடைய கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள். ௭ அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பர்களையெல்லாம் அழைத்து: இவன் ஆபத்தைத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என்னுடைய பெண்களையும், என்னுடைய மகன்களையும், என்னுடைய வெள்ளியையும், என்னுடைய பொன்னையும் கேட்க, இவன் என்னிடம் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான். ௮ அப்பொழுது எல்லா மூப்பர்களும் எல்லா மக்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள். ௯ அதினால் அவன் பெனாதாத்தின் தூதுவர்களை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்முறை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; தூதுவர்கள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள். ௧௦ அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான். ௧௧ அதற்கு இஸ்ரவேலின் ராஜா மறுமொழியாக; ஆயுதம் அணிந்திருக்கிறவன், ஆயுதம் பிடுங்கிப் போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டக்கூடாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான். ௧௨ பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள். ௧௩ அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். ௧௪ யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான். ௧௫ அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களை எண்ணிப்பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் மக்களாகிய எல்லா மக்களின் எண்ணிக்கையும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான். ௧௬ அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடிவெறி கொண்டிருந்தார்கள். ௧௭ மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்கள் முதலில் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனிதர்கள்: சமாரியாவிலிருந்து மனிதர்கள் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள். ௧௮ அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான். ௧௯ மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது, ௨௦ அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டினார்கள்; சீரியர்கள் பயந்தோடிப் போனார்கள்; இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின்மேல் ஏறிச் சில குதிரை வீரர்களோடு தப்பியோடிப்போனான். ௨௧ இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் தாக்கி, சீரியர்களில் பெரிய அழிவு உண்டாக வெட்டினான். ௨௨ பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யவேண்டியது என்னவென்று கவனித்துப்பாரும்; அடுத்த வருடத்திலே சீரியாவின் ராஜா உமக்கு எதிராக வருவான் என்றான்.
௨௩ சீரியாவின் ராஜாவுடைய வேலைக்காரர்கள் அவனைப் பார்த்து: அவர்களுடைய தெய்வங்கள் மலைத்தெய்வங்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடு சமபூமியிலே யுத்தம்செய்தால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம். ௨௪ அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்களுடைய இடத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாக வீரர்களை ஏற்படுத்தி; ௨௫ நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான். ௨௬ அடுத்த வருடத்திலே பெனாதாத் சீரியர்களை எண்ணிப் பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய ஆப்பெக்குக்கு வந்தான். ௨௭ இஸ்ரவேல் மக்களும் எண்ணிக்கை பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டு மந்தையைப்போல முகாமிட்டார்கள்; தேசம் சீரியர்களால் நிறைந்திருந்தது. ௨௮ அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். ௨௯ ஏழுநாட்கள்வரை அவர்கள் நேருக்கு நேராக முகாமிட்டிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் துவங்கி, இஸ்ரவேல் மக்கள் ஒரே நாளிலே சீரியர்களில் ஒரு இலட்சம் காலாட்களைக் கொன்றுபோட்டார்கள். ௩௦ மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாக இருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் மதில் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையில் பதுங்கினான். ௩௧ அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் சணலாடைகளை எங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளை எங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடு வைப்பார் என்று சொல்லி, ௩௨ சணலாடைகளைத் தங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளைத் தங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து: என்னை உயிரோடு வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்செய்கிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா, அவன் என்னுடைய சகோதரன் என்றான். ௩௩ அந்த மனிதர்கள் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின்சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடம் வந்தபோது, அவனைத் தன்னுடைய இரதத்தில் ஏற்றிக்கொண்டான். ௩௪ அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.
ஆகாபை தீர்க்கதரிசி கடிந்துகொள்ளுதல்
௩௫ அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப் பார்த்து அடிக்கமாட்டேன் என்றான். ௩௬ அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனதால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனைவிட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது. ௩௭ அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான். ௩௮ அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான். ௩௯ ராஜா அவ்வழியாக வருகிறபோது, இவன் ராஜாவைப் பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு; இவன் தப்பிப்போனால் உன்னுடைய உயிர் அவன் உயிருக்குச்சமமாக இருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான். ௪௦ ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் வேலையாக இருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான். ௪௧ அப்பொழுது அவன் சீக்கிரமாகத் தன்னுடைய முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான். ௪௨ அப்பொழுது இவன் அவனை நோக்கி: கொலைசெய்வதற்கு நான் நியமித்த மனிதனை உன்னுடைய கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டதால், உன்னுடைய உயிர் அவனுடைய உயிருக்கு ஈடாகவும், உன்னுடைய மக்கள் அவனுடைய மக்களுக்கு இணையாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். ௪௩ அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.