அத்தியாயம்– ௪
௧ நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: ௨ சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ௩ ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு. ௪ சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும். ௫ நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ௬ ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது. ௭ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். ௮ இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார்.
தனிப்பட்ட அறிவுரைகள்
௯ நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு. ௧௦ ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். ௧௧ லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். ௧௨ தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன். ௧௩ துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. ௧௪ கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. ௧௫ நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். ௧௬ நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக. ௧௭ கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன். ௧௮ கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
இறுதி வாழ்த்துக்கள்
௧௯ பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. ௨௦ எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். ௨௧ மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ௨௨ கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.