அத்தியாயம்– ௧௭
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்
௧ ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான். ௨ அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான். ௩ கர்த்தர் யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து, ௪ தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். ௫ ஆகையால் கர்த்தர் அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது. ௬ கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான். ௭ அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும், ௮ இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான். ௯ இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள். ௧௦ யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள். ௧௧ பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். ௧௨ இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். ௧௩ யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். ௧௪ தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள். ௧௫ அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். ௧௬ அவனுக்கு உதவியாக கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள். ௧௭ பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். ௧௮ அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். ௧௯ ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.