அத்தியாயம்– ௨
இன்பமும் மாயையே
௧ நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது. ௨ சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். ௩ வானத்தின்கீழ் மனுமக்கள் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பெற்று அனுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்வரை, என்னுடைய இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என்னுடைய உடலை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என்னுடைய உள்ளத்தில் வகைதேடினேன். ௪ நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன். ௫ எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன். ௬ மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன். ௭ வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது. ௮ வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். ௯ எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட நான் பெரியவனும் செல்வம் நிறைந்தவனுமானேன்; என்னுடைய ஞானமும் என்னோடுகூட இருந்தது. ௧௦ என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். ௧௧ என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
ஞானமும் மதியீனமும் மாயை
௧௨ பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான். ௧௩ இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன். ௧௪ ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன். ௧௫ மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். ௧௬ மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
பிரயாசமும் மாயையே
௧௭ ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செயல்களெல்லாம் எனக்கு வருத்தமாக இருந்தது; எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. ௧௮ சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே. ௧௯ அவன் புத்திமானாக இருப்பானோ, மூடனாக இருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் உழைத்து ஞானமாகச் சம்பாதித்த எல்லா பொருட்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. ௨௦ ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் செய்த எல்லா பிரயாசத்தின் மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைத்தேடினேன். ௨௧ ஒருவன் புத்தி, அறிவுக்கூர்மை, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆனாலும் அப்படி பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாகவும் இருக்கிறது. ௨௨ மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லா பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? ௨௩ அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே. ௨௪ மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். ௨௫ என்னைவிட நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? என்னைவிட விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்? ௨௬ தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவம்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனிடம் வைத்துவிட்டுப் போகும்படியாகச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.