அத்தியாயம்– ௧௬
ஆகாரும் இஸ்மவேலும்
௧ ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குக் குழந்தையில்லாமல் இருந்தது. எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் என்னும் பெயர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். ௨ சாராய் ஆபிராமை நோக்கி: நான் குழந்தைபெறாமலிருக்கக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடு சேரும், ஒருவேளை அவளால் என்னுடைய குடும்பம் கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தையின்படி ஆபிராம் செய்தான். ௩ ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ௪ அவன் ஆகாருடன் இணைந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள், தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் எஜமானியை அற்பமாக நினைத்தாள். ௫ அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக என்றாள். ௬ அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் அதிகாரத்திற்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாக நடத்தியதால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள். ௭ கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்திரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்று அருகில் கண்டு: ௮ சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் எஜமானியாகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். ௯ அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் எஜமானியிடத்திற்குத் திரும்பிப்போய், அவளுடைய அதிகாரத்திற்குள் அடங்கியிரு என்றார். ௧௦ பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகச்செய்வேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாக இருக்கும் என்றார். ௧௧ பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக. ௧௨ அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். ௧௩ அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பெயரிட்டாள். ௧௪ ஆகையால், அந்தக் கிணற்றின் பெயர் லகாய்ரோயீ எனப்பட்டது; அது காதேசுக்கும் பேரேத்துக்கும் நடுவே இருக்கிறது. ௧௫ ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் மகனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டான். ௧௬ ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.