அத்தியாயம்– ௨
கவனிக்கவேண்டுமென எச்சரிப்பு
௧ எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும். ௨ ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ௩ முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், ௪ அற்புதங்களினாலும், அதிசயங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய விருப்பத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாக இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலை இல்லாமல் இருப்போம் என்றால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
இயேசு அவருடைய சகோதரர்களைப்போல மாற்றப்பட்டார்
௫ இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. ௬ ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? ௭ அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். ௮ எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை; ஆனால், இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. ௯ என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம். ௧௦ ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது. ௧௧ எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: ௧௨ உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; ௧௩ நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ௧௪ எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், ௧௫ ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார். ௧௬ எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார். ௧௭ அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது. ௧௮ எனவே, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.