அத்தியாயம்– ௩௧
மீதியானியர்களைப் பழிவாங்குதல்
௧ கர்த்தர் மோசேயை நோக்கி: ௨ இஸ்ரவேல் மக்களுக்காக மீதியானியர்களிடத்தில் பழிவாங்கு; அதின் பின்பு உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். ௩ அப்பொழுது மோசே மக்களை நோக்கி: கர்த்தருக்காக மீதியானியர்களிடம் பழிவாங்கத்தக்க, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகும்படியாக மனிதர்களைப் பிரித்தெடுங்கள். ௪ இஸ்ரவேலர்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான். ௫ அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னிரெண்டாயிரம்பேர் யுத்தத்திற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள். ௬ மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்பும்போது, அவனுடைய கையிலே பரிசுத்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான். ௭ கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள். ௮ அவர்களைக் கொன்றுபோட்டதும் அல்லாமல், மீதியானியர்களின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் மகனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். ௯ அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு, ௧௦ அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து, ௧௧ தாங்கள் கொள்ளையிட்ட பொருள்களையும் தாங்கள் பிடித்த மனிதர்கள் மிருகங்கள் அனைத்தையும் சேர்த்து, ௧௨ சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமவெளிகளிலுள்ள முகாமிலிருந்த மோசேயினிடத்திற்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடமும், இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடமும் கொண்டுவந்தார்கள். ௧௩ மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள். ௧௪ அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவர்களும், நூறுபேருக்குத் தலைவர்களுமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, ௧௫ அவர்களை நோக்கி: பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா? ௧௬ பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே. ௧௭ ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள். ௧௮ பெண்களில் ஆண்தொடர்பு அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள். ௧௯ பின்பு நீங்கள் ஏழுநாட்கள் முகாமிற்கு வெளியே தங்குங்கள்; மனித உயிரைக் கொன்றவர்களும். வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து, ௨௦ அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும் என்றான். ௨௧ ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரர்களை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்: ௨௨ அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி, ௨௩ அவைகளை அக்கினியிலே போட்டு எடுக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத் தகாதவைகள் எல்லாம் தண்ணீரினால் சுத்தம் செய்யவேண்டும். ௨௪ ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம் என்றான்.
கொள்ளையிடப்பட்டவைகளை பங்கிடுதல்
௨௫ கர்த்தர் மோசேயை நோக்கி: ௨௬ பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய முன்னோர்களாகிய தலைவர்களும் கணக்கிட்டு, ௨௭ கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள். ௨௮ மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் கர்த்தருக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி, ௨௯ அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும். ௩௦ இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்கிலோ மனிதர்களிலும், மாடுகள், கழுதைகள், ஆடுகளாகிய எல்லா வித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றார். ௩௧ கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள். ௩௨ படைவீரர்கள் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும், ௩௩ எழுபத்திரெண்டாயிரம் மாடுகளும், ௩௪ அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாக இருந்தது. ௩௫ ஆணுடன் உடலுறவுகொள்ளாத பெண்களில் முப்பத்திரெண்டாயிரம்பேர் இருந்தார்கள். ௩௬ யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. ௩௭ இந்த ஆடுகளிலே கர்த்தருக்கு வரியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து. ௩௮ மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்கு வரியாக வந்தது எழுபத்திரண்டு. ௩௯ கழுதைகள் முப்பதாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தரின் பகுதியாக வந்தது அறுபத்தொன்று. ௪௦ மனிதஉயிர்கள் பத்தாயிரம்பேர்; அவர்களில் கர்த்தருக்கு வரியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர். ௪௧ கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான். ௪௨ யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது: ௪௩ ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு, ௪௪ மாடுகளில் முப்பத்தாறாயிரம், ௪௫ கழுதைகளில் முப்பதாயிரத்து ஐந்நூறு, ௪௬ மனிதஉயிர்களில் பத்தாயிரம்பேருமே. ௪௭ இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான். ௪௮ பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவர்களும் நூறுபேருக்குத் தலைவர்களுமான அதிகாரிகள் மோசேயிடம் வந்து, ௪௯ உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்களுடைய கையின் கீழிருக்கிற யுத்தமனிதர்களை கணக்கு பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை. ௫௦ ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள். ௫௧ அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள். ௫௨ இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவர்களானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவர்களானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பத்தாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாக இருந்தது. ௫௩ யுத்தத்திற்குப் போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக கொள்ளையிட்டிருந்தார்கள். ௫௪ அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் மக்களுக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.