அத்தியாயம்– ௧௫
வாழ்வின் ஒழுங்குமுறைகள்
௧ சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். ௨ ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். ௩ கர்த்தரின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. ௪ ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். ௫ மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. ௬ நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. ௭ ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. ௮ துன்மார்க்கர்களுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். ௯ துன்மார்க்கர்களுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். ௧௦ வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். ௧௧ பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? ௧௨ பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். ௧௩ மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். ௧௪ புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். ௧௫ சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து. ௧௬ சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். ௧௭ பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. ௧௮ கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். ௧௯ சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை. ௨௦ ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். ௨௧ மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். ௨௨ ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். ௨௩ மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! ௨௪ கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். ௨௫ அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். ௨௬ துன்மார்க்கர்களுடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். ௨௭ பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். ௨௮ நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். ௨௯ துன்மார்க்கர்களுக்குக் கர்த்தர் தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். ௩௦ கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். ௩௧ வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும். ௩௨ புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். ௩௩ கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.