அத்தியாயம்– ௧௮
ஞானம் வாழ்வின் வழிகாட்டி
௧ பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். ௨ மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். ௩ துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். ௪ மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். ௫ வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. ௬ மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். ௭ மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. ௮ கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். ௯ தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். ௧௦ கர்த்தரின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். ௧௧ செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். ௧௨ அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. ௧௩ காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். ௧௪ மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? ௧௫ புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். ௧௬ ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். ௧௭ தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். ௧௮ சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். ௧௯ பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். ௨௦ அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். ௨௧ மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். ௨௨ மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். ௨௩ தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். ௨௪ நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.