சங்கீதம்– ௨௪
தாவீதின் பாடல்
௧ பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் கர்த்தருடையவை. ௨ ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். ௩ யார் கர்த்தருடைய மலையில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த இடத்தில் நிலைத்திருப்பான்? ௪ கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. ௫ அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். ௬ இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) ௭ வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். ௮ யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. ௯ வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். ௧௦ யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் இராஜா. (சேலா)