சங்கீதம்– ௩௬
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்
௧ துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. ௨ அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். ௩ அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். ௪ அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். ௫ கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. ௬ உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். ௭ தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். ௮ உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். ௯ வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். ௧௦ உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும். ௧௧ பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. ௧௨ அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.