சங்கீதம்– ௫௬
௧ தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். ௨ என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். ௩ நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். ௪ தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்? ௫ எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது. ௬ அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். ௭ அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும். ௮ என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? ௯ நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். ௧௦ தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். ௧௧ தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்? ௧௨ தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். ௧௩ நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?