சங்கீதம்– ௧௨௨
தாவீதின் ஆரோகண பாடல்
௧ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன். ௨ எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. ௩ எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ௪ அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய மக்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் பெயரைப் போற்றுவதற்குப் போகும். ௫ அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. ௬ எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். ௭ உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். ௮ என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன். ௯ எங்களுடைய தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.