சங்கீதம்– ௧௩௫
௧ அல்லேலூயா, கர்த்தருடைய பெயரைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரர்களே, துதியுங்கள். ௨ கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். ௩ கர்த்தர் நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது. ௪ கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். ௫ கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். ௬ வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். ௭ அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். ௮ அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். ௯ எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். ௧௦ அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; ௧௧ எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து, ௧௨ அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். ௧௩ கர்த்தாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். ௧௪ கர்த்தர் தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். ௧௫ அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. ௧௬ அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ௧௭ அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. ௧௮ அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். ௧௯ இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள். ௨௦ லேவி குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள். ௨௧ எருசலேமில் குடியிருக்கிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.