சங்கீதம்– ௧௪௬
௧ அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. ௨ நான் உயிரோடிருக்கும்வரை கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். ௩ பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். ௪ அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். ௫ யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். ௬ அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். ௭ அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். ௮ குருடர்களின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; விழுந்தவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் நேசிக்கிறார். ௯ அந்நியர்களைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். ௧௦ கர்த்தர் எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.