சங்கீதம் 4
கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 நீதியுள்ள என் இறைவனே, 
நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். 
என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; 
என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும். 
 2 மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? 
எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்? 
 3 யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; 
நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார். 
 4 நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; 
நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, 
உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள். 
 5 நீதியான பலிகளைச் செலுத்தி, 
யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள். 
 6 “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; 
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். 
 7 தானியமும் புதுத் திராட்சை இரசமும் 
நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட 
அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர். 
 8 நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; 
ஏனெனில் யெகோவாவே, 
நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.