சங்கீதம் 5
புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், 
என் பெருமூச்சைக் கவனியும். 
 2 உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், 
என் அரசனே, என் இறைவனே, 
உம்மிடமே நான் வேண்டுகிறேன். 
 3 யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; 
நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, 
எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன். 
 4 நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; 
தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது. 
 5 திமிர் பிடித்தவர்கள் 
உமது சமுகத்தில் நிற்கமுடியாது; 
அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர். 
 6 பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; 
இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும் 
யெகோவா அருவருக்கிறார். 
 7 ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே 
உமது வீட்டிற்கு வந்து, 
உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி 
பயபக்தியுடன் வணங்குவேன். 
 8 யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் 
உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; 
உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும். 
 9 அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; 
அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; 
அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; 
அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 
 10 இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்; 
அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும். 
அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்; 
ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள். 
 11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்; 
அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்; 
உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி, 
அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும். 
 12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; 
ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.