சங்கீதம் 15
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? 
உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்? 
 2 குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், 
நீதியானதைச் செய்கிறவர்கள், 
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; 
 3 தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், 
தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், 
மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; 
 4 இழிவானவனை அவமதிப்பவர்கள், 
யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; 
ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் 
மனதை மாற்றாதவர்கள்; 
 5 ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், 
குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். 
இவ்வாறு வாழ்கிறவர்கள் 
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.