சங்கீதம் 16
மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். 
 1 இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், 
ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன். 
 2 நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; 
உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன். 
 3 நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் 
என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.” 
 4 பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். 
இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்; 
அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன். 
 5 யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; 
எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர். 
 6 எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; 
நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு. 
 7 எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; 
இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. 
 8 யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். 
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன். 
 9 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; 
என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். 
 10 ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; 
உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். 
 11 வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; 
உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், 
உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.