சங்கீதம் 26
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், 
ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; 
நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், 
நான் தடுமாறுவதில்லை. 
 2 யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், 
என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்; 
 3 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு 
எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 
நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன். 
 4 ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, 
வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை; 
 5 தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், 
கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். 
 6 யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, 
உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, 
 7 உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, 
உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன். 
 8 யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, 
நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன். 
 9 பாவிகளோடு என் ஆத்துமாவையும், 
இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும். 
 10 அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; 
அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன. 
 11 ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; 
என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும். 
 12 என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; 
நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.