சங்கீதம் 27
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், 
நான் யாருக்குப் பயப்படுவேன்? 
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், 
நான் யாருக்குப் பயப்படுவேன்? 
 2 தீய மனிதர் என்னை விழுங்கும்படி 
எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, 
எனது பகைவரும் விரோதிகளுமான 
அவர்களே தடுமாறி விழுவார்கள். 
 3 ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், 
என் இருதயம் பயப்படாது; 
எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், 
அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன். 
 4 நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், 
அதையே நான் தேடுகிறேன்: 
நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், 
அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் 
நான் என் வாழ்நாள் முழுவதும் 
யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன். 
 5 ஏனெனில் துன்ப நாளில், 
அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; 
அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, 
கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார். 
 6 அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள 
பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; 
அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, 
யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன். 
 7 யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; 
என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும். 
 8 என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், 
யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன். 
 9 உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; 
கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; 
நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். 
என் இரட்சிப்பின் இறைவனே, 
என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம். 
 10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், 
யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார். 
 11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; 
என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் 
என்னை நேரான பாதையில் நடத்தும். 
 12 என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; 
ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் 
என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். 
 13 நானோ வாழ்வோரின் நாட்டில் 
யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று 
இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். 
 14 யெகோவாவுக்குக் காத்திரு; 
பெலன்கொண்டு தைரியமாயிரு, 
யெகோவாவுக்கே காத்திரு.