சங்கீதம் 28
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 
நீர் என் கன்மலை, 
எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். 
நீர் மவுனமாகவே இருப்பீரானால், 
நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன். 
 2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, 
நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, 
என் கைகளை உயர்த்தி 
இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும். 
 3 கொடியவர்களுடனும் 
தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், 
அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; 
ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள். 
 4 அவர்களுடைய செயல்களுக்காகவும் 
அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; 
அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, 
அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும். 
 5 யெகோவாவினுடைய செயல்களுக்கும், 
அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், 
யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; 
மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார். 
 6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; 
ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். 
 7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; 
என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். 
என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; 
நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன். 
 8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்; 
தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே. 
 9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, 
உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; 
அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.