சங்கீதம் 108
தாவீதின் சங்கீதமாகிய பாடல். 
 1 இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; 
நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன். 
 2 யாழே, வீணையே, விழித்தெழுங்கள், 
நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன். 
 3 யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; 
மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். 
 4 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, 
அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; 
உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. 
 5 இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; 
உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும். 
 6 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, 
உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். 
 7 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: 
“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; 
சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். 
 8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; 
எப்பிராயீம் என் தலைக்கவசம், 
யூதா என் செங்கோல். 
 9 மோவாப் என் கழுவும் பாத்திரம், 
நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; 
நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” 
 10 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? 
யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? 
 11 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், 
எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? 
 12 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; 
ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. 
 13 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; 
அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.