சங்கீதம் 109
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, 
நீர் மவுனமாய் இருக்கவேண்டாம். 
 2 கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், 
தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; 
பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். 
 3 அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; 
காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள். 
 4 அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், 
நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன். 
 5 அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; 
என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள். 
 6 என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; 
அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக. 
 7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; 
அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக. 
 8 அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; 
அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக. 
 9 அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், 
அவன் மனைவி விதவையாகட்டும். 
 10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; 
அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக. 
 11 கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; 
அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக. 
 12 ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், 
அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக. 
 13 அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; 
அவன்* 109:13 அவன் அல்லது அவர்களுடைய பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக. 
 14 அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; 
அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக. 
 15 ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே 
யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்; 
அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும். 
 16 ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; 
மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், 
உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான். 
 17 சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; 
அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக; 
ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை, 
ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக. 
 18 அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; 
அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும், 
அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது. 
 19 சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; 
அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக. 
 20 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், 
என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும் 
இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக. 
 21 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, 
நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்; 
உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும். 
 22 ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், 
என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது. 
 23 நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; 
ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன். 
 24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; 
என் உடல் மெலிந்து போயிருக்கிறது. 
 25 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; 
அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள். 
 26 யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; 
உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும். 
 27 யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், 
நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும். 
 28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; 
அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; 
ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன். 
 29 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; 
ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள். 
 30 நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; 
பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன். 
 31 ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; 
அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து 
அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.