சங்கீதம் 112
 1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, 
அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 
 2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், 
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 
 3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; 
அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 
 4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; 
அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 
 5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். 
 6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; 
நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். 
 7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; 
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். 
 8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; 
அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். 
 9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 
அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 
 10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, 
தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; 
துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.