சங்கீதம் 129
ஆரோகண பாடல். 
 1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு 
அநேகமுறை என்னை நெருக்கினார்கள். 
 2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், 
என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். 
 3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, 
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 
 4 யெகோவாவோ நீதியுள்ளவர்; 
துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, 
இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 
 5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். 
 6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; 
அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். 
 7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், 
அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. 
 8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; 
யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் 
என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.